எந்த வசதியும் இல்லாததைக் கண்டித்து பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம்
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் பிடியில் அடைபட்டுள்ள சரத் பொன்சேகா, தனக்கு தொலைபேசி வசதி அளிக்கப்படவில்லை, குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமை ஆகியவற்றைக் காரணம் காட்டி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளாராம்.
இத்தகவலை தெரிவித்த பொன்சேகாவின் மனைவி அனோமா தனது கணவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார் என்று கூறினார்.
அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி பொன்சேகா கடந்த மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது கொழும்பு நகரில் விமானப் படை கட்டுப்பாட்டில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் சரத் பொன்சேகா.
ராணுவ நீதிமன்ற விசாரணைக்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. போதிய ஆதாரங்களை சேகரித்த பின்னர் அவர் ராணுவத் தளபதியிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், பொன்சேகா மொபைல் போன் பயன்படுத்துவதை அதிகாரிகள் தடுத்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்காக அவர் வைத்திருந்த மொபைல் போனை அதிகாரிகள் திடீரென வாங்கி வைத்து கொண்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த பொன்சேகா அந்த வசதியை வழங்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில்,
பொன்சேகாவுக்கு மொபைல் போன் தரவேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் இல்லை. சட்டப்படி அவர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை.
கரிசனத்துக்காக அவர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதித்தோம். அதை எந்நேரத்திலும் தடை செய்ய அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது.
பொன்சேகாவுக்கு தினமும் அவரின் மனைவி தான் உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு செல்கிறார். அதை எல்லாம் நாங்கள் தடுக்கவில்லையே' என்றார்.












Click it and Unblock the Notifications