இளைஞர் காங். தேர்தல்: வாசன் ஆதரவு எம்.எல்.ஏவுக்கு தங்கபாலு நோட்டீஸ்-ஆதரவாளர்கள் அதிர்ச்சி
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்தியதாக கூறி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவு எம்.எல்.ஏவுக்கு மாநில தலைவர் தங்கபாலு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ள செயல் வாசன் வட்டாரத்தை கடுப்பாக்கியுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் தேர்தலின்போது, உட்கட்சி மோதல் வெடித்ததைத் தொடர்ந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் தங்கபாலு.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.,வும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஜெயபால், காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளை வேண்டுமென்றே மதிக்கவில்லை.
கட்சியின் குறிப்பாணைகளுக்கு கீழ்படியாமல் நடந்து, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தேவையற்ற முறையில், கட்சி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இதற்கான முதன்மையான ஆதாரங்கள், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி விதிமுறைகளை மீறியுள்ளார் என்ற அடிப்படையில், ஜெயபால் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, உடனடியாக அவரின் பதிலை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பி வைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயபால், வாசன் கோஷ்டியின் முக்கியமான புள்ளி. தீவிர வாசன் ஆதரவாளர். அவருக்கு தங்கபாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வாசன் வட்டாரத்தை கோபத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
கட்சித் தலைவர் ஆனது முதல் வாசன் கோஷ்டி பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் இருந்து வந்த தங்கபாலு தற்போது திடீரென, நோட்டீஸ், ஒழுங்கு நடவடிக்கை என கிளம்பியிருப்பது அவர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்தது என்ன...?
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தங்கபாலு மட்டும் தலைவராக இல்லை. வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் என ஏகப்பட்ட தலைவர்கள். இருப்பதிலேயே பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டிதான்.
அந்த வகையில், குமரி மாவட்டத்தில் நான்கு கோஷ்டிகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறதாம்.
இதில், நாகர்கோவில் நகராட்சி வார்டுகளுக்கு நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், அனைத்து கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இதில், ஜெயபால், தனது மருமகன் நவீன் என்பவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.
அதேபோல, வாசனின் மற்றொரு ஆதரவாளரான ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஜோ என்பவர் நவீனுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இதனால் வாசன் கோஷ்டிக்குள்ளேயே பிளவாகி விட்டது.
அடிதடி ரகளையாகி போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து ஜான் ஜேக்கப் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஜெயபால் எம்.எல்.ஏ கோஷ்டியினர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட ஜோஷி நடவடிக்கை எடுத்தார். கூடவே இப்போது தங்கபாலுவும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் வாசன் கோஷ்டி எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications