தமிழகத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள்!
மதுரை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போல, கோவில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகிளில் உள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் கூறினார்.
இன்று மதுரையில் நிருபர்களை சந்தித்த சுதர்ஷன் மேலும் கூறுகையில், 'தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 கோவில்கள் உள்ளன.
தினமும் ஒருவேளை பூஜை செய்வது கூட இயலாத நிலையில் உள்ள கோயிலகளுக்கு பூஜை நடத்துவதற்காக 'ஒரு கால பூஜை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் நிதி திரட்டப்பட்டது.
இதில் பொதுமக்களின் நன்கொடையாக ரூ.2500ம் அறநிலையத்துறை ரூ.22,500 ம் ஆக மொத்தம் 25 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட கோவிலின் பெயரில் வங்கியில் நிரந்தர முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக்கொண்டு ஒரு கால பூஜை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிதியில் இருந்து, நலிந்த நிலையில் உள்ள அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் படி சுமார் 10 ஆயிரம் அர்ச்சகர்கள் அல்லது பூசாரிகள் இலவச சைக்கிள் பெறுவார்கள்' என்றார்.












Click it and Unblock the Notifications