Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிறைவேறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!

Subscribe to Oneindia Tamil

Women MP's
டெல்லி: மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2 நாள் பெரும் அமளிக்குப் பின் இன்று ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஓட்டெடுப்பை புறக்கணித்தது. ராஜ்யசபாவில் அந்தக் கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். அதே போல பகுஜன் சமாஜ் கட்சியினரும் வெளிநடப்பு செய்து ஓட்டெடுப்பை புறக்கணித்தனர்.

மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்பி்க்களும் எதிராக 1 எம்பியும் வாக்களித்தனர். மற்ற எம்பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டனர். (ராஜ்யசபாவில் மொத்தம் 233 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 155 எம்பி்க்கள் ஆதரவு இருந்தால் அது மூன்றில் ஒரு பங்கு மெஜாரிட்டியாகும்)

மகளிர் மசோதா குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் நிறைவேற்றுவதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தார் மம்தா. முக்கிய பிரச்சனைகளில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு மம்தா கடைசி நேரத்தில் பல்டி அடிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடதுசாரிகள் இந்த மசோதாவை ஆதரித்ததால் அதை மம்தா எதிர்த்ததாகத் தெரிகிறது.

2 நாள் அமளி - துமளி...

முன்னதாக நேற்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

லாலு, முலாயம் கட்சிகளைச் சேர்ந்த 25 எம்பிக்கள் செய்த ரகளையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறியது. அப்போது சில எம்.பிக்கள் அவைத் தலைவர் அன்சாரியிடமிருந்து மசோதா நகலைப் பறித்து கிழித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அமளி காரணமாக நேற்று முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இயங்க முடியவில்லை.

இன்றும் காலையிலிருந்தும் அவைகளையும் நடத்த முடியாத நிலை நிலவியது. ராஜ்யசபா காலையில் கூடியபோது அமளி ஏற்படவே அடுத்தடுத்து 3 மணி வரை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவும் முடங்கியது..

அதே போல மகளிர் மசோதா பிரச்சினையால் லோக்சபாவும் இன்று காலை முதல் நடத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

காலையிலிருந்து அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு வந்த லோக்சபா மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சோனியாவுடன் பிரதமர், லாலு, முலாயம் ஆலோசனை:

இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

மகளிர் மசோதாவால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது குறித்தும், மசோதாவை எப்படி நிறைவேற்றுவது அல்லது அதில் திருத்தம் கொண்டு வரலாமா என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதேபோல முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரையும் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்களிடம் மசோதாவை இப்போது நிறைவேற்ற ஒத்துழைப்பு தாருங்கள். நீங்கள் சொல்லும் திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சோனியா காந்தி கோரினார்.

ஆனால் முலாயமும், லாலுவும் இதை ஏற்கவில்லை. நாங்கள் சொல்லும் திருத்தங்களுடன் மசோதாவை தாக்கல் செய்தால் மட்டுமே நிறைவேற்ற ஆதரவு தருவோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.

அதே போல மசோதாவை மீதான ஓட்டெடுப்பை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த மம்தா பானர்ஜியிடமும் சோனியா தொலைபேசியில் பேசி ஆதரவு கோரினார். ஆனால், அதுவும் பலனிக்கவில்லை.

இந் நிலையில் கடும் அமளிக்கு இடையே மகளிர் மசோதா மீது மாலை 3 மணிக்கு ராஜ்யசபாவில் விவாதம் தொடங்கியது.

புதிய வரலாறு - பாஜக:

இதன்மீது முதலில் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி பேசுகையில், அவையில் நடந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதே நேரத்தி்ல் மசோதாவை ஆதரிப்பதாகக் கூறினார். இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

அவரைப் பேச விடாமல் லாலு, முலாயம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

ஜேட்லியைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி பிருந்தா காரத்தும் மசோதாவை ஆதரித்துப் பேசினர்.

பின்னர் பேசிய பகுஜன் சமாஜ் எம்பி சதீஷ் மிஸ்ரா, மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தான் நியாயம். இந்த 33 சதவீதம் போதாது. அதே போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றுவது அந்த சமூக பெண்களுக்கு எதிரானது என்றார்.

இதையடுத்துப் பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன் மசோதாவை ஆதரித்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் எம்பி டி.ராஜா மசோதாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

திமுக எம்பி கனிமொழி பேசுகையில், இது ஒரு வரலாற்று தினம். இந்த மசோதாவை முதலில் நிறைவேற்றிவிட்டு பின்னர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தத்தை கொண்டு வரலாம் என்றார்.

இந்த விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மசோதாவுக்கு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் கிடைத்து, கிட்டத்தட்ட ஒருமித்த மனதோடு இதை நிறைவேற்றுவது மகிழ்ச்சி தருகிறது. இந்த மசோதா விவகாரத்தில் நேற்று ராஜ்யசபாவில் நடந்த சம்பவங்கள் பெரும் வருத்தம் தருகிறது. அதற்காக அவைத் தலைவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இதையடுத்து சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசினார். இதைத் தொடர்ந்து மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்து ஓட்டெடுப்பை புறக்கணித்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்பிக்களும், எதிராக 1 எம்பியும் வாக்களித்தனர். மற்றவர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

ராஜ்யசபாவைத் தொடர்ந்து லோக்சபாவிலும் மாநில சட்டசபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

ராஜ்யசபாவிலேயே இவ்வளவு திணறிய மத்திய அரசு அதை எப்படி லோக்சபாவில் நிறைவேற்றப் போகிறது என்று தெரியவில்லை.

விவாதம் இல்லையேல் ஆதரவில்லை-பாஜக:

முன்னதாக இந்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடத்தாவிட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று பாஜக திடீரென அறிவித்தது.

பாஜகவின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த மசோதாவை நிறைவேற்றுவது கடினம் என்பதால் இன்று விவாததுக்கு மத்திய அரசு முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

மசோதா கூறுவது என்ன...?:

அரசியல் சட்ட 108வது திருத்த மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.

ஏற்கனவே பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெண்களுக்கு பஞ்சாயத்து அமைப்புகளில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அதிக அளவிலான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்படுவது இந்தியாவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேசிய அளவில் நாடாளுமன்றத்தி்ற்கும், ச்டடசபைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+