ஓமந்தூரார் தோட்டத்துக்கு கருணாநிதியின் நள்ளிரவு 'விசிட்'!
சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உருவாகி வரும் சட்டசபை புதிய கட்டித்தை முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கான புதிய கட்டிடம் துரித கதியில் தயாராகி வருகிறது. வரும் 13ம் தேதி இக்கட்டிடம் திறப்பு விழா காண உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பல முக்கிய தலைவர்கள் முன்னிலையில் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
முதல்வர் கருணாநிதியும் கட்டிடப் பணிகளை கிட்டத்தட்ட தினந்தோறும் வந்து பார்த்துவிட்டு செல்வதை கடந்த இரு மாதங்களாக வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
கட்டிடத்தின் ஒவ்வொரு வேலையிலும் தனக்கு தெரிந்த குறைபாடுகள், திருத்தங்களை சொல்லி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற கருணாநிதி, அங்கு 3 வெவ்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இரவு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசி முடிக்கும் போது இரவு மணி 10.15.
அதன் பின்னர் கருணாநிதி சென்னை வந்து சேர்ந்தபோது மணி 12.45ஐ தொட்டுவிட்டது.
சென்னைக்குள் நுழைந்த உடனேயே வண்டியை நேராக ஓமந்தூரார் தோட்ட வளாகத்துக்கு விடச் சொன்னார் கருணாநிதி.
தன்னுடன் ஸ்டாலினையும் அழைத்துக் கொண்டு, இன்றைய தினத்தில் குறிப்பிட்ட பணிகள் முடிந்துவிட்டனவா என கருணாநிதி சென்று பார்வையிட்டுள்ளார்.
நடுநிசியில் ஒரு மணிக்கு முதல்வர் வந்து பார்வையிடுவதை அறிந்த அங்கிருந்த பணியாளர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications