குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி மோசடி செய்த கும்பல் கைது
சென்னை: குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி வெற்றுத்தாள்களை கரன்சி நோட்டுகள் போல பண்டல் செய்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (28). இவரிடம் ஒரு கும்பல் ரூ.100க்கு 60 பைசா வட்டி வீதம் கடன் தருவதாக கூறி ரூ.25 லட்சத்தை கொடுத்தனர்.
இந்த பணத்தை கொடுக்கும் முன்பாக முதல் தவணைக்கான வட்டியாக ரூ.50 ஆயிரத்தை தங்கராஜிடம் அந்த கும்பல் வாங்கிக் கொண்டது.
முன்யோசனை இன்றி கரன்சி கட்டுக்களை தங்கராஜ் வாங்கி வைத்துக்கொண்டார். பின்னர் ரூபாய் நோட்டு கட்டுக்களை பிரித்து பார்த்த போது அதில் கருப்புத்தாள்களும், நியூஸ் பேப்பர்களும் பண்டல் செய்யப்பட்டிருந்தன.
மேல் பகுதியில் மட்டும் நிஜமான கரன்சி நோட்டுகள் இருந்தன. ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நெல்லையைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மதுமதி, அவர் கணவர் முரளி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு குறித்து போலீசார் தெரிவிக்கையில், 'அமீர் என்ற கார்த்திகேயன் மீது மதுரை, தென்காசி, குற்றலாம், சென்னை மதுரவாயல் ஆகிய இடங்களில் தங்க நாணய மோசடி மற்றும் பண இரட்டிப்பு மோசடி, லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மேலும் இவருடன் கைதான லட்சுமி என்ற மதுமதி என்ற பெண் சென்னையில் அமீருக்கு ஏஜெண்டு போல் செயல்பட்டார். இவர் வாடிக்கையாளர்களுடன் வசீகரமாக பேசி, குறைந்த வட்டியில் லோன் வாங்கிக் கொடுப்பதாக பேசி வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்துள்ளார்.
இவரது கணவரும் டிப்டாப் உடை அணிந்து மதுமிதாவிடம் சேர்ந்து செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் இது போன்று கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் லோன் வாங்கித் தருகிறேன். தங்க நாணயங்கள் தருகிறேன் என்று கூறும் கும்பல்களிடம் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.












Click it and Unblock the Notifications