முலாயம், லாலு, சரத் யாதவுடன் பிரதமர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

தங்களது நிலையில் மாற்றம் இல்லை என்று மூன்று தலைவர்களும் அறிவித்து விட்டனர்.
நேற்று பெரும் அமளிக்கு மத்தியில் ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முலாயம், லாலு, மாயாவதி கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு நேற்று ராஜ்யசபாவையும், லோக்சபாவையும் முடக்கிப் போட்டு விட்டனர்.
அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். வெறுமனே பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொன்னால் அது குறிப்பிட்ட சில பிரிவு பெண்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்பது அவர்களின் வாதம்.
நேற்றைய அமளி காரணமாக முதலில் 2 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 3 மணி வரையும், அதன் பின்னர் 4 மணி வரையும், பிறகு 6 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டு கடைசியில் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக மகளிர் மசோதா மீது விவாதம் நடத்தப்பட முடியவில்லை. வாக்கெடுப்பும் நடத்த முடியவில்லை.
இந்த முட்டுக்கட்டையை நீக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இறங்கினர். நேற்று இரவு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. ஆனால் இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இன்று காலை ஒன்பதரை மணிக்கு லாலு, முலாயம், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்குச் சென்று அவருடன் பேச்சு நடத்தினர்.
அப்போது பிரதமர், ராஜ்யசபாவில் எந்தவித அமளியும் செய்யாமல் மசோதா நிறைவேற ஒத்துழைப்பு தருமாறு மூன்று தலைவர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் தத்தமது நிலையை விளக்கி விட்டு மூன்று பேரும் கிளம்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் பேசுகையில், நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதை பிரதமரிடம் தெளிவாகக் கூறி விட்டோம். சில திருத்தங்களைத்தான் நாங்கள் கோருகிறோம். அதைச் செய்துதான் ஆக வேண்டும். மேலும் விவாதம் நடத்திய பின்னரே வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இதையும் பிரதமரிடம் கூறி விட்டோம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி கட்சிகளின் கருத்தை அறிந்து பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் பிரதமரிடம் யோசனை தெரிவித்துள்ளோம் என்றார்.
இன்றே வாக்கெடுப்பு - சோனியா உறுதி - காங். பீதி!
இதற்கிடையே, இன்றே வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதில் சோனியா காந்தி பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருப்பதாக தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி கவலை அடைந்துள்ளது.
சுமூக நிலையே இன்னும் ஏற்படாமல் இருப்பதால் வாக்கெடுப்பில் நிச்சயம் பாதகமான விளைவுகளே ஏற்படும் என காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் தெரிவித்துள்ளனராம்.
இருப்பினும் இன்றே வாக்கெடுப்பு நடந்து விட வேண்டும் என்பதில் சோனியா காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு ஆதரவாக உள்ள கட்சியினரை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக, இடதுசாரி தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.
அதேசமயம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் உடன்பாட்டை எட்டிய பின்னர் இன்று மாலை வாக்கில் வாக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என்று பிரணாப் முகர்ஜி ஆலோசனை கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
டேபிள் வெயிட் அகற்றம்...
இதற்கிடையே, நேற்று மாலை 3 மணியளவில் ராஜ்யசபா மீண்டும் கூடுவதற்கு முன்பு ராஜ்யசபா ஊழியர்களும், பாதுகாவலர்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதாவது உறுப்பினர்களின் டேபிள் மீது உள்ள அசையும் பொருட்களான டேபிள் வெயிட் உள்ளிட்டவற்றை அகற்றினர். அதேபோல எலக்ட்ரானிக் கடிகாரங்களும் அகற்றப்பட்டன. உறுப்பினர்கள் வீசி எறி்ந்து ரகளையில் ஈடுபட்டு விடாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியை நேற்று உறுப்பினர்கள் குறி வைத்ததால், அவரது இருக்கைக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உறுப்பினர் யாரும் அவரது டேபிளை நெருங்கி விடாத வகையில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications