மதுரையில் போலீஸ் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் சிக்கியது!
திருப்பரங்குன்றம்: போலீஸ் போல் நடித்து பொறியாளர் குடும்பத்தினரிடம் ரூ.9 லட்சம் நகை பணம் கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னை போரூரை சேர்ந்தவர் லிங்கராஜ், என்ஜினீயர். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்றார்.
பின்னர் அனைவரும் அதே காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களது கார் மதுரை ரிங் ரோட்டில் கருவேலம்பட்டி விலக்கில் வந்தபோது போலீஸ் போல் உடையணிந்து நின்ற 4 பேர் காரை வழி மறித்தனர்.
பின்னர் அவர்கள் காரில் இருந்த லிங்கராஜ், அவரது மனைவி மணிமேகலாதேவி, தாயார் தமிழ்மணி மற்றும் உறவினர்கள் 2 பேர் உள்பட 5 பேரை காரிலிருந்து மிரட்டி இறங்க செய்தனர்.
அனைவரையும் இருட்டான இடத்திற்கு அழைத்துச்சென்ற கும்பல் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 33 பவுன் நகை, 2 டிஜிட்டல் வீடியோ கேமராக்கள், 7 செல்போன்கள், 2 ஐபோன்கள் உள்பட பொருட்களை கொள்ளையடித்தனர்.
காரையும் பறித்துக்கொண்டு அதே காரில் தப்பினர். இரவில் விடிய விடிய இருளில் தவித்த அவர்கள் மறுநாள் காலை திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கொள்ளையர்கள் யார் என்பது குறித்து கண்டறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மதுரை ரிங் ரோட்டில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக கூறினர். போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள துர்காராம் தெருவை சேர்ந்த பாண்டி மகன் பழனிக்குமார் (30), சரவணன் (40), முருகன் (27), ராமச்சந்திரன் (21) என்பது தெரியவந்தது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னை என்ஜினீயரிடம் நகை, பணம், செல்போன் உள்பட பொருட்களையும் காரையும் பறித்துச்சென்று இவர்கள் தான் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 33 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், 9 செல்போன்கள், 2 டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், 24 பவுன் கொண்ட 3 தங்கக்கட்டி ஆகியவற்றை மீட்டனர்.
மேலும் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, 4 கத்திகள், 2 டார்ச் லைட்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications