நித்தியானந்தா மீதான வழக்குகள் - விசாரிக்க தமிழகம் வருகிறது கர்நாடக போலீஸ்
பெங்களூர் சாமியார் நித்தியானந்தா மீதான செக்ஸ் ஊழல் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போலீஸார் தமிழகம் வரவுள்ளனர்.
நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.
நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்கிற நித்ய தர்மானந்தா என்பவர்தான் காட்சிகளைப் படம் பிடித்தது தெரிய வந்தது. மேலும் லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புதிய வீடியோ ஒன்றையும் அளித்தார். நித்தியானந்தா மீது பல்வேறு புகார்களையும் கூறினார்.
இதன் அடிப்டையில், 6 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதவிர சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ஒரு மோசடி வழக்கையும், கோவையில் ஒரு மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதில் சென்னையில் தொடரப்பட்ட வழக்குகளில் கற்பழிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, கோவை போலீஸாரும் அங்கு பதிவான வழக்கை கர்நாடகத்திற்கு மாற்ற கோரியிருந்தனர். இதையடுத்து இரு வழக்குகளும் கர்நாடகத்திற்கு மாற்றி நேற்று டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் கர்நாடக காவல்துறைக்கு அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, லெனின் கருப்பனை கர்நாடக போலீஸார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் லெனின் எங்கே என்பது தெரியவில்லை. கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்த பின்னர் அவரும் தலைமறைவாகி விட்டார்
கர்நாடக போலீஸ் வருகை..
இந்த நிலையில், விசாரணைக்காக பெங்களூர் போலீசார் விசாரணை நடத்த சென்னை வருகிறார்கள்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையில் கிடைத்தவுடன் பெங்களூர் போலீசார் சென்னை வருகிறார்கள். சாமியார் சி.டி.வெளியானது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லெனினுக்கு யார் யார் உதவி செய்தார்கள், நித்தியானந்தா, ரஞ்சிதா இடம் பெற்றுள்ள படுக்கை அறைக் காட்சிகள் இடம் பெற்ற சி.டி. வெளியானதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லெனின் சொந்த ஊரான சேலம் ஆத்தூருக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள். அப்போது லெனின் சிறு வயது பழக்க வழக்கங்கள் பற்றியும் விசாரணை நடத்தவுள்ளனர்.
லெனினின் பின்னணி குறித்தும் கர்நாடக போலீஸார் விசாரிக்கவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications