பென்னாகரம்: அதிமுகவுக்கு தலித் மக்கள் முன்னணி ஆதரவு
மதுரை: பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரிப்பது தலித் மக்கள் முன்னணி தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சட்டமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மத்திய அரசு இதனை உடனே திரும்ப பெற வேண்டும்.
தலித் மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்தி தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்ற சட்டம் இயற்ற வேண்டும்' என்றும் அவர் கோரியுள்ளார்.
யாருக்கும் ஆதரவில்லை-கொ.நா.மு.க:
இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்கவில்லை என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பென்னாகரம் இடைதேர்தலில் நாங்கள் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். இடைத்தேர்தல் சம்பந்தமாக எங்களிடம் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால் நாங்கள் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை. நல்ல வேட்பாளர் யார் என்பதை பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
வர இருக்கின்ற பொது தேர்தலையொட்டி எங்கள் கட்சியை வலுப்படுத்தும் வழிகளில் தற்போது ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை.
திருப்பூர், கரூரில் இருந்து வரும் சாயக்கழிவுகள் கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
இந்த பாதிப்பை களைவதற்காக மத்திய அரசு ரூ.200 கோடியும், மாநில அரசு ரூ.120 கோடியும் ஒதுக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாடு வெற்றிக்கரமாக நடைபெற எங்களின் பங்களிப்பை வழங்குவோம்.
விவசாயிகளின் நலன் காக்க கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இது சம்பந்தமாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இன்ஸ்பெக்டர் மீது சத்தியாகிரக இயக்கத்தினர் புகார்:
இந் நிலையில் நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி பொது மக்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்த சத்தியாகிரக இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
பென்னாகரம், இடைத் தேர்தலில், நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி விழுப்புரம் மாவட்ட சத்தியாகிரக இயக்கத்திர் பென்னாகரத்தில் துண்டு பிரசுரம் வினியோகித்தும், பொது மக்கள் காலில் விழுந்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பென்னாகரம் வாரச் சந்தையில் இவர்கள் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போலீஸ் அனுமதியில்லாமல் பிரசாரம் செய்ததாக கூறி அவர்களிடம் இருந்த துண்டு பிரசுரங்களை பறித்தார்.
மேலும் அவர்களை ஆபாசமாகவும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்து சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் சாஸ்திரி தலைமையில் அதன் நிர்வாகிகள், எஸ்பி சுதாகரிடம் புகார் அளித்தனர்.
துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு:
இந் நிலையில் பென்னாகரம் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு காரணங்களால் விடுபட்டு போன தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
அவற்றை பரிசீலனை செய்து தற்போது 2483 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி நிலவரப்படி பென்னாகரம் இடைத்தேர்தலில் ஓட்டளிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து எட்டு ஆகும்.
வர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 892 ; பெண் வாக்காளர்கள் 98 ஆயிரத்து 116 ஆகவுள்ளது.












Click it and Unblock the Notifications