தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி- ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவு

மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்தப் பணிகளைக் குறி வைத்தும், இந்தியர்களைக் குறி வைத்தும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அங்கு மேற்கொண்டு வரும் பணிகளை விரைவில் முடித்து விட்டு தாயகம் திரும்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் பணிகளை அப்படியே நிறுத்தி விட்டு திரும்பி வரவும் கூட இந்தியா தயாராகி விட்டதாம்.
காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தை குறி வைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்தியாவை, ஆப்கானை விட்டு விரட்டுவதே அவர்களது நோக்கமாக உள்ளது. இதற்காக அவர்கள் நடத்தும் தாக்குதல்களில் பல அப்பாவிகள் பலியாகி வருகிறார்கள்.
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த பயங்கரத் தாக்குதலில் 6 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கன் பணிகளை குறைத்துக் கொண்டு வெளியேற இந்தியா முடிவு செய்ததாக தெரிகிறது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் இதுகுறித்து ஆப்கன் தரப்புடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துணையுடன் தலிபான் தீவிரவாதிகள் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், 2008ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி நடந்த தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நடந்த தாக்குதலில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஜவான்கள் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து ஆப்கன் பணிகளைக் குறைத்து விட இந்தியா முடிவு செய்துள்ளது. காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாளர்கள் அளவைக் குறைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஹெராத், காந்தஹார், மஜர் இ ஷெரீப், ஜலாலாபாத் ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications