நித்தியானந்தா வீடியோ காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பியது மோசமான செயல்- எதியூரப்பா

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் எதியூரப்பா பேசுகையில், தமிழகத்திடமிருந்து விசாரணை குறித்த அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
நித்தியானந்தா தொடர்பான வீடியோ காட்சிகளை தொடர்ந்து திரும்பத் திரும்ப ஒளிபரப்பிய செயல் நல்லதல்ல, மோசமான ஒன்று. இது நநமது நாட்டு கலாச்சாரத்திற்கு முரணானது.
சம்பந்தப்பட்ட ஆசிரமம் அமைந்துள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானது. அதை கையகப்படுத்த சட்டம் ஏதும் இல்லை.
சம்பவங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் நடந்திருப்பதாக தமிழக அதிகாரிகள் கூறியதாக நான் அறிந்தேன். தற்போது நித்தியானந்தா தலைமறைவாக உள்ளார். அதேசமயம், அரசுக்குச் சொந்தமில்லாத ஒரு இடத்தை கையகப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஏதாவது புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம். இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை.
தமிழகத்தில் நித்தியானந்தா சாமியாருக்கு எச்சரிக்கை விடப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நாங்கள் அதுபோல செய்ய மாட்டோம் என்றார் எதியூரப்பா.
ஆச்சார்யா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாறணை நடத்துமாறு ராமநகரா மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளோம். இதுவரை தமிழகத்திலிருந்து எங்களுக்கு எந்த அறிக்கையும், புகாரும் வரவில்லை. எனவே இதுவரை எந்த வழக்கும் நித்தியானந்தாவுக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை என்றார்.
திருச்சி போலீஸார் பெங்களூர் வருகை:
இதற்கிடையே, திருச்சியிலிருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெங்களூர் வந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் நித்தியானந்தாவிடம் சிறைப்பட்டுள்ளதாக அவரது தந்தையான ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சமீபத்தில் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து திருச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் பிடுதி ஆசிரமத்திற்கு வந்தார்.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் தரப்பில் கூறுகையில், அந்த பையன் என்ன சொல்கிறான் என்பதைப் பொறுத்துதான் இந்த வழக்கின் திசை செல்லும். நித்தியானந்தாவுடனேயே இருக்க அவன் முடிவு செய்யலாம் அல்லது பெற்றோருடன் செல்ல முன்வரலாம். நாங்கள் தற்போதைக்கு திருச்சி போலீஸாருக்கு உதவி செய்து வருகிறோம், நாங்கள் இதில் தலையிடவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications