முப்படையில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து தற்போது ராணுவம், விமானப்படை போன்ற பாதுகாப்புப் படைகளில் ஆண்களுக்கு நிகராக இனி பெண்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு உள்ள அனைத்து விதிகளும் இனி பெண்களுக்கும் பொருந்தும்.
இதுவரை பாதுகாப்புப் படைகளில் பெண்கள் 14 ஆண்டு காலம் வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இனி அது மாறி ஆண்களுக்கு உள்ள ஓய்வு காலமே பெண்களுக்கும் பொருந்தும்.
மேலும் பெண் அதிகாரிகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட பிற நிதிச் சலுகைகள் இல்லாமல் இருந்தது. அதேசமயம், ஆண்களுக்கு 5 ஆண்டு பணி முடித்தாலே ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைத்து விடும். இனி அது பெண் அதிகாரிகளுக்கும் கிடைக்கும்.
ஆண்களுக்கு உள்ளதைப் போலவே பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிஷன் அமைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் முதல் முறையாக 1992ம் ஆண்டு பெண்கள் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் கடந்த 2005ம் ஆண்டில், பெண்கள் 14 ஆண்டு காலம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என ராணுவம் அறிவித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான விதிகளை அரசு மாற்றியது. இருப்பினும் அது பணியில் உள்ள பெண்களுக்குப் பொருந்தாது என்றும் புதிதாக சேரும் பெண்களுக்கே அது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications