கைதிகளுக்கு விலங்கு மாட்ட தடை - மீண்டும் உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்
சென்னை: அவசியம் இல்லாவிட்டால் கைதிகளுக்கு கைவிலங்கிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானியில் எண்ணை கடை நடத்தி வரும் அகமது அலி என்பவரின் கடையில் எழுத்தராக பணியாற்றி வரும் இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
'அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் அகமது அலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்ற ஆலோசனைக்குழு முன்பாகவும், அவரை போலீசார் ஆஜர்படுத்தி வருகின்றனர். அப்போதெல்லாம் அகமது அலிக்கு கைவிலங்கிட்டு சிறைக்கு அவரை அழைத்து செல்கின்றனர்.
கைதிகளுக்கு கைவிலங்கிடுவது பற்றி உச்சநீநிமன்றம் ஏற்கனவே சில விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அந்த விதிகளை போலீசார் மற்றும் அகமது அலி அடைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறை அதிகாரிகள் மீறுகின்றனர். எனவே, அகமது அலிக்கு கைவிலங்கு அணிவிப்பதை தடை செய்து உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'நீதிமன்றம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்லும்போது கைதிகளை போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர். அவர்களில் சில கைதிகளுக்கு விலங்கிடுவது பற்றி போலீசார் தான் முடிவு செய்கின்றனர்.
கை விலங்கிடுவதற்கும், சிறைச்சாலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதில் சிறைச்சாலை அதிகாரிகள் தலையிடமாட்டார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் தீர்ப்பளிக்கையில், 'விசாரணை கைதி என்றாலும், தண்டனை கைதி என்றாலும், அவர்களது உரிமையை பெற்று தருவதற்காக உச்சநீநிமன்றம் பல விதிகளை வகுத்தளித்துள்ளது.
அந்த கைதிகளுக்கு எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் விலங்கிட வேண்டும் என்பது பற்றி தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தால் கைவிலங்கிட்டு கொள்வது பற்றியும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், கைவிலங்கிடுவது அவசியமானால், அதற்காக மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ஏற்கனவே பெற்று வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவது கோர்ட்டு அவமதிப்பு தண்டனைக்கு உகந்த குற்றமாக கருதப்படும்.
எனவே, 14 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அந்த உத்தரவு, கோவை சிறை அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும், தமிழக உள்துறை தெரிவிக்காமல் இருப்பது துரதிருஷ்டமாகும்.
எனவே, கைதிகளுக்கு விலங்கிடுவது பற்றிய உச்சநீநிமன்ற உத்தரவையும், தற்போதைய இந்த உத்தரவையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும், தமிழக அரசு, டி.ஜி.பி. ஆகியோர் தெரிவிக்க வேண்டும். இவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதற்கு உத்தரவிட வேண்டும' என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications