புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு அமெரிக்காவின் தங்க தர நிர்ணயச் சான்று

மேலும் உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் என்ற சிறப்பையும் இந்தக் கட்டடம் பெற்றுள்ளது.
இது குறித்து, பசுமைக் கட்டட ஆலோசகராக செயல்பட்ட, 'இஎன்-3' அமைப்பின் நிர்வாகி தீபா சத்தியராம், நிருபர்களிடம் நேற்று கூறியது:
சாதாரண கட்டடத்திற்கும், பசுமைக் கட்டிடத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் சட்டசபை பசுமை கட்டிடமாகவும், இந்தியாவிலே மிகப்பெரிய அரசு பசுமைக் கட்டடமாகவும் கட்டப்பட்டு உள்ளதால் அமெரிக்க-இந்திய பசுமைக் கட்டட கழகம் 'தங்க தர நிர்ணய சான்றிதழ்' (Lead Gold Certificate) வழங்கியுள்ளது.
பசுமைக் கட்டடம் என்பதால் புதிய சட்டசபை கட்டிடத்தில் தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த அளவு மின்சாரம், எரிபொருள் செலவாகும்.
இயற்கை வளங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டடத்தில் பணியாற்றுபவர்கள் சுகாதாரமான சூழ்நிலையில் பணிபுரிவார்கள்.
இந்த கட்டடத்திற்கான அடித்தளம் கட்டும்போது நிலத்தின் மேற்பரப்பில் உள்ள வளமான மண் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த மண் மலைபோல் குவிக்கப்பட்டு 8 மாதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த வளமான மண்ணைக் கொண்டு புல்வெளிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டிட இடிபாடுகள், குழிகளை மூடவும், மேடுபள்ளங்களை நிரப்பவும் பயன்படுத்தப்பட்டன.
சட்டசபை வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் 21 இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டர், கார் போன்றவற்றை இங்கே சார்ஜ் செய்து கொள்ளலாம். சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடுகள்.
மாடிப் பூங்காக்கள்... புல்வெளிகள்
புதிய சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்தின் மொத்த பரப்பளவு 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடியாகும். இதில், 3 லட்சத்து 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அழகிய புல்வெளிகள், சிறிய மற்றும் பெரிய மரங்கள் வளர்க்கப்பட உள்ளன.
சில மாதங்களிலே வண்ண, வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும். விரைவிலே பச்சை போர்வை போர்த்தியது போல சட்டசபை வளாகம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும்.
தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக மறுசுழற்சி முறையில் தண்ணீரைப் பயன்படுத்தும் வசதி உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டு உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்தம் செய்ய முடியும். அந்த நீர் புல்வெளிகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும். இதன்மூலம் 52 சதவீதம் தண்ணீர் பயன்பாடு குறையும்.
கோலம் டிசைன்...
புதிய சட்டசபை கட்டிடத்திற்குள் வெப்ப தாக்குதலை தடுப்பதற்காக விசேஷ கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கட்டிடத்தின் வெளிப்பகுதியில் தங்கமென மின்னும் அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், கோலம் வடிவில் ஏராளமான சிறிய துளைகள் இருக்கின்றன.
இதன் வழியாக கட்டிடத்திற்கு சூரிய வெளிச்சம் வரும், வெப்ப தாக்குதல் இருக்காது. கட்டிடத்தில் உள்ள அறைகளில் வெப்ப தாக்குதல் குறைவாக இருக்கும்போது 20 சதவீதம் எரிபொருள் தேவை குறையும். புதிய சட்டசபை கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் நேரடியாக வெப்ப தாக்குதல் இருக்காது.
மொத்தம் உள்ள 4 கட்டிடத்தில் நூலகம் மற்றும் முதல்-அமைச்சருக்கான கட்டடங்களில் சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் மாடித் தோட்டம் (ரூப் கார்டன்) அமைக்கப்படுகிறது. மற்ற கட்டடங்களின் மேற்பகுதியில் 80 சதவீதம் சூரிய ஒளியை திருப்பி அனுப்பும் நவீன வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1,000 அறைகள் உள்ளன.
ஒவ்வொரு அறையிலும் ஏ.சி.யில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை கட்டுப்படுத்தவும், ஆப் செய்யவும் தனித்தனியே வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு அறையில் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை யாரும் இல்லை என்றால் அங்குள்ள லைட், பேன், ஏ.சி. ஆகியவை தன்னாலே ஆப் ஆகும் வசதியும் செய்து தர உள்ளனர்.
எல்லாவற்றையும்விட புதிய சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்குள் யாரும் புகைபிடிக்க அனுமதியில்லை.
பசுமை கட்டட தர சான்று
இந்தியாவில் மொத்தம் 70 கட்டிடங்களுக்கு பசுமைக் கட்டிட தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 2 கட்டிடம் அரசு கட்டடங்கள் ஆகும். மீதமுள்ள 68 கட்டிடங்கள் தனியாருக்கு சொந்தமானவை.
இந்தியாவிலே முதன் முதலாக கர்நாடக மாநிலம், குல்பர்க்காவில் கட்டப்பட்ட போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு பசுமைக் கட்டட தர சான்று அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 20 ஆயிரம் சதுரஅடிதான்.
இரண்டாவதாக தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு பசுமைக் கட்டிட தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி என்பது குறிப்பிடத்தக்கது..." என்றார்.












Click it and Unblock the Notifications