ஒரே நாளில் 31,000 ஊழியர்கள் ஓய்வு - சிக்கலில் கேரள அரசு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இம்மாத இறுதியில் சுமார் 31 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். இதனால் ஏற்படும் நிதி மற்றும் நிர்வாக சிக்கலை எப்படி எதிர்கொள்வது என கேரள அரசு அதிகாரிகள் விழிபிதுங்கி யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
கேரளாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தேதி இந்த வருடம் முதல் ஒரே சீராக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருடத்தில் எந்த மாதத்தில் ஓய்வு பெறும் நாள் வந்தாலும் மார்ச் 31ம் தேதியே அவர்களை பணியில் இருந்து விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஓய்வு பெறும் நாள் வந்தாலும் அவருக்கு அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை கூடுதலாக பணியாற்றலாம். இந்த உத்தரவு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், கேரள அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் 31ம் தேதியுடன் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 31 ஆயிரம் பேர் ஓய்வு பெற உள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது கொடுக்க வேண்டிய சலுகைகள் பலகோடியை தாண்டும். மேலும் அனைத்து இடங்களுக்கும் உடனடியாக ஊழியர்களை நியமிக்க முடியாது.
வேலை காலியிடம் வந்தால் மட்டும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்களை நியமிக்க முடியும் என்பதால் அரசு பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை சட்டசபையில் இதுபற்றி உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் அச்சுதானந்தன், இவ்விவகாரத்தை சமாளிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications