86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை!- முதல்வர் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi with Sonia Gandhi
சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அவர் பேச்சிலிருந்து...

"நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா? நிறைவேறத்தான் விடுவார்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்துள்ள பிரதமரையும் சோனியா காந்தி அம்மையாரையும் பாராட்டும் விதமாக அனைவரும் ஒரு நிமிடம் கரவொலி எழுப்பிட வேண்டும் ( விழாவில் பலத்த கரகோஷம்).

1921-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் முதன்முதலாக அமைந்த நீதிக்கட்சி அரசுதான், பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

மகளிர் மேம்பாட்டிற்காக 1929-ம் ஆண்டிலேயே பெரியார் செங்கற்பட்டு நகரிலே மாநாடு நடத்தி பெண்களுக்கு சொத்திலே பங்கு கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை 60 ஆண்டு காலத்திற்குப்பிறகு 1989-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையிலே சட்டம் ஆக்கியவர்கள் நாம் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண் ஜனாதிபதிக்கு முதல் ஆதரவு இங்கிருந்துதான்....

இந்தியாவின் ஜனாதிபதியாக முதன்முதலாக ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று முடிவு செய்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அதனை வரவேற்று, பிரதிபா பட்டீலை தமிழகத்திற்கு முதன்முதலாக அழைத்து மகளிரைக் கொண்டு பிரமாண்டமான பேரணி நடத்தி அவரது வெற்றிக்கு வித்திட்டதும் இந்த தமிழ் மண் தான்.

14 வங்கிகளை நாட்டுடைமையாக்குவதற்காக டெல்லியில் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் குரலெழுப்பி - அதற்கு காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பெரும் எதிர்ப்பு தோன்றிய போதிலும் -அதை பொருட்படுத்தாமல் வங்கிகளை நாட்டுடைமையாக்க அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து மிகப் பெரியதோர் பாராட்டை வழங்கி - 14 பரிசுகளை வழங்கியதும் இந்த இடத்திலே தான்.

உறவைக் கெடுக்க சதி...

சோனியா காந்தி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வந்தபோது - அவரை வரவேற்று - "இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!'' என்று நான் கூறினேன். அந்தத் தேர்தலிலும், அதற்குப்பிறகு நடைபெற்ற 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசும், தி.மு.க.வும் உடன்பாடு கொண்டு வெற்றி மேல் வெற்றி குவித்து வருவதோடு, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் நிறைவேற்றி வருகிறோம்.

இந்திராகாந்தி 1980-ம் ஆண்டு சென்னை கடற்கரை கூட்டத்திலே கூறியதுபோல-"உடன்பாடு கொண்ட நிலையிலும்-எதிர்க்கின்ற நிலையிலும்-இரண்டிலும் உறுதியோடு கருணாநிதி இருப்பார் -என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் தி.மு.க. உறவு நீடித்து வருகின்றது.

இந்த உறவை துண்டிக்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சிகள் - எத்தனையோ பயணங்கள். மீடியாக்கள் கனவு கண்டு கட்டிவிடும் கற்பனை பிரசாரங்கள்.

ஆனால் எங்களிடையே உள்ள உறுதிப்பாடு - பகை மூட்டும் அந்த முயற்சிகளையெல்லாம் வெற்றி பெற செய்யவில்லை. தங்களின் அந்த நேச மனப்பான்மைக்கும், நெஞ்சுறுதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கென்று ஏதுமில்லை....

இந்தியாவின் மிகச்சிறந்த இந்த கட்டிடம் உருவாக காரணமாக இருந்த நான்; மிகமிக சாமான்யமானவன் - சாதாரண ஒரு குடும்பத்திலே - ஒரு சிறிய கிராமத்திலே பிறந்தவன் - எனக்கென்று எந்தவிதமான குடும்ப பெருமையும் இல்லை. நடுத்தர குடும்பத்தை விட குறைந்த வசதி படைத்த குடும்பம் தான் என்னுடையது. எந்த கல்லூரியிலும் சேர்ந்து நான் பட்டம் பெற்றவன் அல்ல. "நன்றாகப்படி'' என்று அண்ணா என்னை வாழ்த்தினார். நல்லவர்களுக்கெல்லாம் "படிந்து'' நடக்க கற்றுக் கொண்டேனே அல்லாமல் உயர்கல்வி படிப்பை கற்றுத்தேர்ந்தவன் அல்ல நான்.

எனக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு - உழைப்பு தான். ஓய்வில்லாமல் உழைப்பு. அது கலைத்துறையானாலும் அரசியல் துறையானாலும் - சமுதாய துறையானாலும் - இலக்கிய துறையானாலும் - அனைத்திலுமே அயர்வில்லாத உழைப்பு.

நான் சிறை வைக்கப்பட்ட இடம் இது...

எனக்கென்று எந்தவிதமான தனிப்பட்ட விருப்பமும் எப்போதும் இருந்தது இல்லை. ஏழை, எளிய மக்களுக்கு உழைக்க வேண்டும், அவர்களின் அகத்திலும், முகத்திலும் மகிழ்ச்சியை காண வேண்டும், அதற்கு என்ன வழி என்று தான் எந்த நேரத்திலும் நான் சிந்திக்கிறேன்.

எனக்கு இப்போது வயது 86. இந்த 86 வயதிலே கூட எனக்கு சொந்தமாக அரண்மனை போல ஒரு வீடு கட்டிக்கொண்டு -அதிலே ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று நான் நினைத்ததில்லை.

நான் எதிர்க்கட்சி தலைவனாக இருந்தபோது - அரசின் சார்பில் எங்கள் சட்டமன்ற கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம் - அதுவும் இதே இடம் தான் - இந்த இடத்திலிருந்து என்னையும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களையும் கைது செய்து - எங்கள் கட்சியின் அலுவலக பொருள்களை வெளியே தூக்கியெறிந்து வேறிடம் செல்லுங்கள் என்று வெளியேற்றினார்கள். அதன் காரணமாக எழுந்ததுதான் எங்கள் கட்சிக்கு என்று ஒரு கட்டிடம் - அண்ணா அறிவாலயம்.

அதன் பிறகு கூட - நள்ளிரவில் ஒரு நாள் என்னை கைது செய்து - அன்றைய சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு கொண்டு வந்து - தன்னந்தனியனாக விடிய விடிய காவலில் வைத்திருந்த இதே இடத்திலே தான் இன்று இந்த பிரமாண்டமான கட்டிடம் உருவாகியுள்ளது.

அனைவரிடமும் அன்பு...

நான் அனைவரிடமும் அன்பு செலுத்தவே விரும்புகிறேன். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கூட நான் அன்போடும், பாசத்தோடும் நடந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை சட்டமன்றத்திலே உள்ள எதிர்க்கட்சி நண்பர்களே நன்கறிவார்கள். மற்றவர்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது - ஒரு காலத்தில் மீண்டும் அவர்களை சந்திக்க நேரிடும் போது; அப்போது அவர்கள் முகம் சுளிக்கக்கூடிய விதத்திலே ஆகக்கூடாது என்று எண்ணித்தான் யாரையும் விமர்சிக்க வேண்டுமென்று நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

தமிழகத்திலே உள்ள அடித்தட்டு மக்களை கைதூக்கி விட முயற்சிகள் மேற்கொள்வதோடு, அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பதோடு - நமது உயிராம் தமிழ் மொழியை உச்சியிலே வைத்துக் கொண்டாடுகின்ற உயர் தனிக்கொள்கையை என்றும் நாங்கள் மறந்தோம் இல்லை.

1936-40-ம் ஆண்டுகளின் போது - பள்ளி மாணவனாக நான் இருந்த நிலையில் - அந்த இளமை பருவத்தில் திருவாரூரில் உள்ள சுவர்களில் "நடமாடும் கோயில் திருப்பணி'' என்று எழுதப்பட்ட விளம்பரங்களை நான் பார்த்து - "இது என்ன புதிய கோயில்? இருக்கின்ற கோயில்கள் எல்லாம் போதாமல் நடமாடும் கோயில் வேறா?'' என்று எனக்கு நானே பேசிக்கொள்வேன்.

கலைஞர் காப்பீட்டு திட்டம் ஏன்?

அதனை அதே திருவாரூரில் ஞானியார் என்று அழைக்கப்பட்ட பெரியவரிடம் ஒரு நாள் கேட்டும் விட்டேன்.

அதற்கு அவர் தந்த விளக்கம் - கோயில் திருப்பணி என்பது பழுதடைந்த கோயில்களை பராமரிக்கும் பணி - அதுபோல மனித உடலிலே உள்ள பழுதுகளை அகற்றி புதுப்பிக்கும் பணி - அதுவே நடமாடும் கோயில் திருப்பணி என்பதாகும் என்று ஆன்மிக முறையில் விளக்கமளித்தார்.

அது என் மனதிலே பதிந்து தான் கண்ணொளி வழங்கும் திட்டம் தொடங்கி, 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் உருவாயிற்று - 108 அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் - இளஞ்சிறார்க்கான இருதய அறுவை சிகிச்சை திட்டம் போன்றவையாகும்.

மாற்றுத் திறனாளர்களுக்கு உதவ வேண்டும்..

அதன் தொடர்ச்சியாகத்தான் ஊனமுற்றவர்களைப்பற்றி ஐ.நா.மன்றத்தில் 2007-ம் ஆண்டு இந்தியாவும் ஏழாவது நாடாக கையெழுத்திட்டு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களையெல்லாம் "மாற்றுத் திறனாளி'' என்று அழைக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய முறையில் உதவிடும் வகையிலும் முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டுமென்றும் இந்த திட்டத்தை மத்திய அரசும் மேற்கொண்டு அமல்படுத்திட வேண்டுமென்றும் இந்த நேரத்தில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அண்ணாவை தொடர்ந்து, அவருக்கு பிறகு 1969-ல் தமிழக முதல்வராக முதன்முதலாக நான் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தின் அரசியல், சமூக பொருளாதார முன்னேற்றங்களை முன்வைத்து நிறைவேற்றிய சமூக சீர்திருத்த திட்டங்கள்; கல்வி வளர்ச்சி பணிகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளித்திடும் பல்வேறு திட்டங்கள், ஏழை, எளிய நலிந்த பிரிவினர் மேம்பாட்டிற்கு தனி கவனம் செலுத்திட வேண்டி உருவாக்கிய புதிய புதிய அமைச்சகங்கள், துறைகள்; அவற்றின் மூலமாக தமிழகம் முழுவதிலும் அமைத்த பாசன திட்டங்கள், மின் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், எண்ணற்ற பாலங்கள், வீட்டுவசதி திட்டங்கள் போன்றவை தமிழக மக்களாலும், தமிழகத்திற்கு அப்பால் மற்ற மாநிலங்களாலும், ஏன், இந்திய பேரரசாலும் பலமுறை பாராட்டுகளை குவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பழம்பெருமையை நினைவுறுத்தும் வகையில் கட்டிட கலைமாண்பை புலப்படுத்தும் வகையில் எழுப்பப்பட்டுள்ள பல நினைவு சின்னங்களையும், பெருமக்களையும் இந்த வேளையில் நான் நினைவு கூர்கிறேன்.

வழிகாட்டிய மேதைகள்

சென்னை மாகாண நலம் - தமிழக நலம் நாடிய பெருமக்கள் பலர் உலாவிய திருவிடத்தில்தான் அவர்களின் நினைவுகளை சுமந்தபடி இந்த புதிய வளாகம் செம்மாந்து நிற்கிறது!

இதனை உருவாக்கும் அருமையான வாய்ப்பினை நல்கிய எனதருமை தமிழக மக்களுக்கும்; என் நெஞ்சில் பகுத்தறிவு சிந்தனைகளையும், தமிழ்மொழி, இன மான உணர்வுகளையும் விதைத்து, வளர்த்து, ஆளாக்கி, வழிகாட்டி சென்ற மேதைகள் பெரியார், அண்ணா ஆகியோர்க்கும்;

நான் களத்தில் நின்று பாடுபட்ட காலத்தில், என் சிந்தனைகளை கூர்மைப்படுத்திட, செயல் திறனில் வேகத்தையும், விவேகத்தையும் கையாண்டிட எனக்கு துணைபுரிந்த காமராஜர், ராஜாஜி, பாபு ஜெகஜீவன்ராம், ஜெயப்பிரகாஷ் நாராயணன், காயிதே மில்லத், ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் போன்ற பெருமக்களுக்கும்;

என்னோடு இணைந்து ஒட்டி உறவாடி உயிர்க்குயிராக பழகி பதவியில் இருந்தபோதும், இல்லாமல் பணிசெய்த காலத்தும் என் நெஞ்சுக்கும், தோளுக்கும் வலிமை சேர்த்த என் உயிரனைய கண்மணிகளாம் தொண்டர்களுக்கும், ஏனையோர்க்கும் இவ்விழாவில் எனது இதயங்கனிந்த நன்றியுணர்வினை காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

என்னுடைய கனவை நனவாக்கும் வண்ணம் பிரமாண்டமான வடிவு பெற்று, சென்னை மாநகரத்தில் மாபெரும் பூகோள குறியீடாக விளங்கும் இந்த வளாக கட்டுமான பணிகளில் உள்ளத்தாலும், உடலாலும், ஓய்வின்றி முழுமையாக ஈடுபட்ட பல்லாயிரம் தொழிலாள நண்பர்கள், கட்டுமான நிறுவனத்தினர், பொறியாளர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, நிதித்துறை செயலாளர் கு.ஞானதேசிகன், பொதுப்பணித்துறைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம், தலைமைப்பொறியாளர் கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு நிலை அரசு அதிகாரிகள் அனைவரையும் அகங்குளிர பாராட்டுகிறேன்!

அண்டை மாநில முதல்வர்களுக்கு நன்றி

எனது அன்பான அழைப்பினை ஏற்று, பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும் இங்கு வந்து வளாகத்தை திறந்து வைத்துள்ள நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கையும், வருகை தந்து விழாவை சிறப்பித்துள்ள சோனியா காந்தியையும் எனது மனமார்ந்த நன்றி மலர்களால் போற்றுகிறேன்!

அதேபோல, அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டுவதை என்றும் நெஞ்சார விரும்பும் என் எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் வண்ணம் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ரோசையாவுக்கும், கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவுக்கும், புதுவை மாநில முதலமைச்சர் வி.வைத்திலிங்கத்துக்கும் தமிழக அரசின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+