ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி
காந்தஹார்: ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
அங்குள்ள சிறைச்சாலை, போலீஸ் தலைமையகம், இரண்டு பிற இடங்களில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகர் இன்னும் தலிபான்களிடமிருந்து முழுமையாக விடுபடவில்லை.
சிறைச்சாலைக்குத்தான் தலிபான்கள் முக்கியமாக குறி வைத்திருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கன் அதிபர் கர்சாயின் உறவினரும், மாகாண கவுன்சில் உறுப்பினருமான அகமது வாலி கர்சாய் கூறுகையில், எனது வீட்டுக்கு அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் வீட்டுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
கடந்த 2008ம் ஆண்டு சிறைச்சாலையை தீவிரவாதிகள் தகர்த்தனர். பின்னர் அதை சீரமைக்கும் பொறுப்பை கனடா நாட்டுப் படையினர் மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த முறை சிறைச்சாலையை தகர்த்த தீவிரவாதிகள் பல கைதிகளை அங்கிருந்து கொண்டு சென்றனர். அவர்களில் பலர் தீவிரவாதிகள் ஆவர். அதைத் தொடர்ந்து கனடியப் படையினர் சிறைச்சாலையை மிகவும் உறுதி படைத்ததாக மாற்றி விட்டதால் இந்த முறை நடந்த குண்டுவெடிப்பில் தலிபான்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications