வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற 3 பாமகவினர் கைது
தர்மபுரி: வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக கூறி 3 பாமகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பென்னாகரம் இடைத் தேர்தல் களம் திருமங்கலத்தை விட படு சூடாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது. ஆளுங்கட்சிக்கும், பாமகவுக்கும் இடையே அங்கு முட்டல், மோதல் அதிகமாக காணப்படுகிறது. மறுபக்கம் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சோர்ந்து போய்க் காணப்படுகிறது.
இந்த நிலையில் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட தின்னூர் கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 3 பேர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று, பென்னாகரம் டிஸ்பி பஞ்சவர்ணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. பஞ்சவர்ணம், பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், தாசில்தாருமான டியூக் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் 8 ஆயிரத்து 710 ரூபாய் இருந்ததாம். துருவித்துருவி விசாரணை நடத்தியபோது தின்னூர் காட்டுக்கொள்ளை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த ரொக்கப்பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறினராம்.
அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தாசில்தாரும், போலீசாரும் பென்னாகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நந்தகுமார் (30) என்பது தெரிய வந்தது. இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ராமலேரிமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் ஜெயராமன் (30). இன்னொருவர் தேவராஜ் (30) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி பஞ்சவர்ணம் கூறுகையில்,
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட தின்னூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது அந்த வழியாக பணத்துடன் சென்ற 3 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.