வக்கீல்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை
வள்ளியூர்: வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்புகளை கைவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் தெரிவித்தார்.
வள்ளியூரில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மைதீன்கான் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயராகவன் வரவேற்றார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபால், வக்கீல் தவசிராஜன், கலெக்டர் ஜெயராமன், எம்எல்ஏக்கள் வசந்தகுமார், அப்பாவு ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி ராமநாதன் பேசுகையில்,
பொதுமக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பத்திற்கும், இந்த அமைப்பு முறையாக செயல்படுவதற்கும் நீதிபதிகளுக்கு சமமான பங்கு வக்கீல்களுக்கும் உண்டு. ஏனெனில் அவர்கள்தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள்.
நீதிபதிகள் நடுவர்களாக இருந்து செயல்படுகிறார்களே தவிர வக்கீல்களின் நீதிமன்ற பரிவர்த்தனை தான் வழக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதால் அவர்கள் மட்டுமின்றி முக்கியமாக பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அதனால் நாம் அந்த கடமைகளில் இருந்து தவறக்கூடாது. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு விட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.