இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை மையங்கள்- அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்களின் கிளைகளை தொடங்களும் பட்டங்கள் வழங்கவும் வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள்) சட்டமசோதா 2010 என்ற இந்த சட்டமசோதா, மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் பெறப்பட்டு, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் குறிப்பிடுகையில், 'உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் தரத்தை உயர்த்தவும், போட்டியை உருவாக்கவும், மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் இந்த சட்டம் வகை செய்யும்.
கல்வித் துறையில் 100 விழுக்காடு வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்போதைய சட்ட முறைப்படி வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பட்டங்கள் வழங்க அனுமதிக்கப்படாது.
ஆனால், தற்போதைய திருத்த மசோதாவின் மூலம் தரமான சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் உயர்கல்வித் துறையில் இணைந்து செயல்பட முடியும்.
யூஜிசி மூலம் தெரிவு செய்யப்படும் சர்வதேச கல்வி நிறுவனங்கள் தங்களின் மையங்களை இந்தியாவில் திறந்து மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பட்டங்களை வழங்கலாம்.
இந்திய உயர்கல்வித்துறையில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்' என்றார்.