நித்தியானந்தாவின் நெல்லை சீடர்களுக்கு சிக்கல்- போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டத்தில் இரு இடங்களிலும், நெல்லை மாநகரத்தில் டவுனிலும் நித்தியானந்தாவின் மையம் உள்ளது. இவற்றில் வாரத்தில் நான்கு நாட்கள் யோகாசன பயிற்சி நடந்து வந்துள்ளது.
இந்த தியான மையங்களில் 300க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வந்துள்ளனர். இந்த தியான மையங்கள் நெல்லை மாநகரத்தில் இரு பள்ளிகள் மற்றும் இரு ஓட்டல்களில் நித்தியானந்தா 4 மாதங்களுக்கு ஒருமுறையில் நேரில் வந்து தியான வகுப்புகள், ஆன்மீக சொற்பொழிவு நடத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள ரகசிய போலீசார் நித்தியானந்தாவால் சீடர்கள், பக்தர்கள் அல்லது தியான மையத்திற்கு வந்து செல்பவர்கள் யாரேனும் சொத்து, பணம் மற்றும் ஏதேனும் வகையில் ஏமாற்றப்பட்டார்களா, அல்லது உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் ரகசிய விசாரணையை தொடர்ந்து சில பக்தர்கள் வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர். பக்தர்களிடம் இருந்து ஏதேனும் புகார் பெற முடியுமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சில சீடர்கள் மற்றும் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுதவிர நாங்கள்தான் கடவுள் என்று கூறிவரும் சில ஆன்மீக சாமியார்களின் ஆன்மீக மன்றம், தியான மடங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.