எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு பீதி: அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தள்ளிப் போட்டது மத்திய அரசு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் காரணமாக லோக்சபாவில் அசாதாரண நிலை காணப்படுகிறது. சமாஜ்வாடி, ராஷ்ரிடிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை கடும் எதிர்ப்பாக உள்ளன. மேலும் பாஜகவும் கூட இப்போது பல்டி அடிக்க ஆரம்பித்துள்ளது.
இடதுசாரிகளும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை பக்கம் திரும்பி விட்டன. இதையடுத்து அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு விடும் என்ற அச்சத்தால் அதைத் தள்ளிப் போட்டு விட்டது அரசு.
இந்தியா- அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வர இந்த மசோதா மிக முக்கியமானதாகும். இந்த நிலையில்தான் இந்த மசோதா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று லோக்சபாவில் சபாநாயகர் மீரா குமார் கூறுகையில், சிவில் அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தாக்கல் செய்யும் நோக்கம் அரசிடம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் எனக்குத் தெரிவித்துள்ளார் என்றார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஏன் இந்த திடீர் முடிவு. பட்டியலிடப்பட்ட ஒரு விஷயத்தை வாபஸ் பெறுவது என்றால் அதை தீர்மானமாக கொண்டு வந்த பின்னர்தான் வாபஸ் பெற வேண்டும் என்று கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவரான எல்.கே.அத்வானி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், பட்டியலில் சேர்க்கப்பட்ட மசோதாவை தாக்கல் செய்யாதது ஏன் என்பதை அரசு உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அரசுத் தரப்பில் எந்தவித விளக்கமும் தரப்படவில்லை. இருப்பினும் இடதுசாரிகளும், பாஜகவும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இவர்களுடன் மூன்று யாதவ்களும் இணைந்து கொள்ளக் கூடும் என்ற கவலையினால்தான் மசோதாவை அரசு தள்ளிப் போட்டு விட்டதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications