நகைக்கடையில் பணம் பறிப்பு - ஹரியானாவில் 8 போலீசார் கைது
பானிப்பட்: லஞ்ச ஒழிப்புப் படையினர் போல நடித்து நகைக்கடை அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற 8 போலீஸ்காரர்கள் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.
அரியானா மாநிலம் பானிபட்டில் அதிரடிப்படை போலீஸ் மையம் உள்ளது. தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் எதிர்த்து போராட வேண்டிய இவர்கள் பொது மக்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி பானிபட்டில் உள்ள நகை கடைக்குள் ஹரியானாவின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள்கள் சென்றுள்ளனர்.
தாங்கள் சண்டிகார் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் எனக்கூறி கடை அதிபர் மல்ஹோத்ராவிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இவர்களின் நடத்தையைப் பார்த்து சந்தேகம் அடைந்த மல்ஹோத்ரா அவர்களுக்கு தெரியாமல் பானிபட் நகர போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் தெரிவித்த யோசனைப்படி, சிறிது நேரம் காக்கவைத்து, பணத்தை அதிரடிப்படை போலீசாரிடம் நகைக்கடை அதிபர் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த பானிபட் போலீசார் கையும் களவுமாக அதிரடிப்படை போலீசாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் ஹரியானா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பானிபட் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications