பெண்களின் நோய்களை குணப்படுத்தும் 'கும்மாங்குத்து' சாமியார்!
எடாவா (உத்தரப் பிரதேசம்): நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி பெண்களை பிரம்பால் அடித்தும், உதைத்தும் வந்த அதிரடி மந்திர வைத்திய சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் சிட்புரா என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள காளி கோயிலில் நேக் சிங் என்ற சாமியார் பெண்களை அடித்து, உதைத்து, நைய்யப் புடைத்து விசித்திரமான முறையில் நோய்களை குணப்படுத்துவதாக தகவல்கள் பரவின.
பிரத்தியேகமாக பெண்களுக்கு மட்டும் மந்திர வைத்தியம் பார்க்கும் இவர், பாதிக்கப்பட்ட பெண்களை காளி கோயிலில் உட்கார வைத்து தாறுமாறாக அடித்து உதைக்கிறார்.
பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் ஒங்கி அறைந்தும், திடீரென வயிற்றிலும், முதுகிலும் குத்து விட்டு அலற வைக்கிறார்.
சில சமயங்களில் தலை மீது கூட ஏறி நின்றிருக்கிறார் என கிராமமக்கள் கூறுகின்றனர்.
இந்த 'அதிரடி மந்திர' வைத்தியத்தின் மூலமாக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகிவிடுவதாக தகவல் பரவியது.
'காளி ஆத்தாள் தன் உடலில் புகுந்து, நோயாளிகளை தன் கையாலேயே அடித்து நோய்களை வாங்கிக் கொள்கிறாள்' என்று இவர் கூறுவதை நம்பி ஏராளமான முதிர்கன்னிகள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கடந்த சில நாட்களாக அடி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இதுபற்றிய தகவல் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு செய்தி அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உ.பி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இடா மாவட்ட தனிப்படை போலீசார் இன்று சிட்புரா கிராமத்துக்கு சென்றது.
போலீஸ் வரும் தகவலை அறிந்த சாமியார் தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications