அரசு பஸ் 'பிரேக்டவுன்'-கீழே இறங்கிய 4 பேர் லாரி மோதி பலி
காஞ்சிபுரம்: அரசு பேருந்து 'பிரேக் டவுன்' ஆனதால் சாலையில் இறங்கி நின்றிருந்த பயணிகள் மீது அந்த வழியே வந்த டேங்கர் லாரி மோதி 4 பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு பேருந்து நேற்றிரவு புறப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் சென்றபோது டீசல் காலயாகி பேருந்து சாலையில் நின்றுவிட்டது.
இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த டேங்கர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.
இதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பானு (21), ரமா (45), லலிதா(35) மற்றும் ரஞ்சித்குமார் (17) ஆகிய 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 14 பேர் செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.