ராமேஸ்வரம் கோவிலை மறைக்கும் கட்டிடங்கள் - பாதுகாப்புக்காக இடிக்க திட்டம்
ராமேஸ்வரம்: ராமேசுவரம் கோவிலை சுற்றி கோபுரங்களை மறைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்க்ள தினமும் வந்து செல்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்கு வெளியே உள்ள பகுதியில் இருந்து பார்த்தால் அனைத்து கோபுரங்களும் தெரியும் வகையில் காட்சி அளித்தன.
ஆனால் தற்போது மக்களின் போக்குவரத்தால், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு அதிகரித்துவிட்டன. 4 ரதவீதிகளை சுற்றிலும் கோவிலின் மதில் சுவர்களை மறைக்கும் அளவுக்கு மிக உயரமாக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் கோவில் பாதுகாப்பு பணிகளை மத்திய பாதுகாப்புபடை பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் ராமேசுவரம் கோவிலில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதும், கோவிலின் மதில் சுவர்களையும், கோபுரங்களையும் மறைத்து தனியார் விடுதி கட்டிடங்கள், வீடுகள், அறநிலையத்துறை கட்டிடங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனையின்படி கோவில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கோவிலின் மதில்சுவர்களையும், கோபுரங்களையும் மறைத்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதி கட்டிடங்கள், வீடுகள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் ஆகியவை இடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு மூலம் விரைவில் ராமேசுவரம் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு கோவிலின் மதில் சுவர்கள், கோபுரங்களை மறைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைக்காக தனியாருக்கு சொந்தமான இடம் இடிக்கப்படும் போது அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.