தர்மபுரி அதிமுக அலுவலகத்தில் போலீஸ் ரெய்ட்: தம்பித்துரை தலைமையில் போராட்டம்
தர்மபுரி: தர்மபுரி அதிமுக அலுவலகத்தில் ரெய்ட் நடத்த போலீஸார் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து அதிமுக எம்பி தம்பித்துரை தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பானது.
பென்னாகரம் இடைத் தேர்தல் களம் படு சூடாக காணப்படுகிறது. முக்கியக் கட்சிகளான திமுக, பாமக, அதிமுக ஆகியவை வெற்றி பெறும் பொருட்டு பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை சரமாரியாக சப்ளை ஆவதாக கூறப்படுகிறது.
இந் நிலையில், தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்ததையடுத்து, தர்மபுரி வட்டாட்சியர் ராமதுரை முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தில் சோதனையிடச் சென்றார்.
அப்போது அரசு அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல், அதிமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மறியல் செய்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், கட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எந்த அடிப்படையில் சோதனை நடத்த வருகிறீர்கள் என்று தம்பிதுரை கேட்டதற்கு, செல்வகணபதி (திமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்) கொடுத்த புகாரில் சோதனை நடத்துகிறோம் என்று அதிகாரிகள் கூறினர்.
அதற்கு தம்பித்துரை, படு ஆவேசமாக, கோர்ட் ஆடரை வாங்கி கொண்டு அலுவலகத்துக்குள் நுழையுங்கள் என்றார். இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
மாலை வரை அதிமுக அலுவலகத்திற்குள் போலீஸார் நுழையவில்லை. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications