கிருஷ்ணாவில் நீர் திறப்பு- பூண்டிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பூண்டி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அந்த நீர் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். இதில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட வேண்டும்.
ஆனால் கடந்த செப்டம்பர் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. இதனால் கூடுதல் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அதிக அளவு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.
35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் இன்று 30.93 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து 600 கனஅடி கிருஷ்ணா நீர் வருவதால் ஏரி வேகமாக நிரம்புகிறது. இங்கிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு நீர் நிலைகளில் இந்த காலகட்டத்தில் 11 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் 7 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது.
இருப்பினும் தற்போது கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருப்பதால் குடிநீர்ப் பிரச்சினை வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.