விமானக் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை- அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: விமானக் கடத்தல் குற்றத்தில் ஈடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
இதன்படி 1982ம் ஆண்டின் விமானக் கடத்தல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. நாடாளுமன்றத்தி்ன் நடப்பு கூட்டத்தில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி இதுகுறித்து கூறுகையில்,
'காந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்துக்கு பின்னர், அதுபோன்ற விசித்திர சூழலில் முறையாக செயல்பட சட்டம் போதிய இடம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
எனவே விமானக் கடத்தல் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் இணைக்கவேண்டிய புதிய அம்சங்கள் குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின் படி, விமான கடத்தல் தொடர்பாகன குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடியும். விமானத்தை கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைப்பதற்கும், விமானத்தை வெடிகுண்டாக பயன்படுத்துவதை தடுப்பதற்கும் இந்த சட்டம் வகை செய்யும்' என்றார்.












Click it and Unblock the Notifications