ஹெட்லியை அமெரிக்காவுக்கு வந்து இந்தியா விசாரிக்கலாம்- அமெரிக்கா
சிகாகோ: மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தனக்குள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்காவுக்கு வந்து இந்தியா விசாரிக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா விரும்பவில்லை என்றும் தெரிகிறது. அப்படிச் செய்தால் ஹெட்லி, அமெரிக்காவின் உளவாளியாக சில காலம் வேலை பார்த்தது அம்பலமாகி விடும் என அது அஞ்சுவதாக தெரிகிறது.
இதுவரை இந்தியா விசாரணைக் குழு, ஹெட்லியை ஒரு முறை கூட நேரில் பார்க்கவே விடவில்லை அமெரிக்கா. ஹெட்லியை மூடு மந்திரம் போல ரகசியமாகவே வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஹெட்லியை விசாரிக்க இந்திய உளவுத்துறையினர் தீவிரமாக முயன்றும் கூட அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது ஹெட்லி தனது ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான். அதில், அமெரிக்க மண்ணில் நடைபெறும் எந்த விசாரணையாக இருந்தாலும் அதில் நேர்மையாகவும், முழுமையாகவும் பங்கேற்க, ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.
சிகாகோ கோர்ட்டில் அவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததற்கு முக்கியக் காரணமே, உயிர் தப்பிக்கத்தான். இந்த வாக்குமூலத்தைக் கொடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவனுக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். அதை விட முக்கியமாக இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அவனை நாடு கடத்தவும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் தற்போது வாக்குமூலம் கொடுத்து விட்டதால் மரண தண்டனையிலிருந்து தப்பி விட்டான் ஹெட்லி. மாறாக ஆயுள் தண்டனையே அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாடு எதற்கும் அவனை தற்போது நாடு கடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கைக்கு தான் போய் விடாமல் தடுக்கவே இவ்வாறு ஹெட்லி நடந்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
கசாப் சொன்னது உண்மை-உஜ்வால் நிகாம்:
ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து மும்பை தாக்குதல் வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மும்பைத் தாக்குதல் வழக்கில் தனக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளான் ஹெட்லி.
இதன் மூலம், இந்த சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய, உயிருடன் சிக்கிய ஒரே நபரான கசாப் கூறியது உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவின் குற்றச்சாட்டும் உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்தியப் புலனாய்வுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இது. தன் மீது சாட்டப்பட்ட 12 குற்றச்சாட்டுக்களையும் ஹெட்லி ஒப்புக் கொண்டிருக்கிறான். இதன மூலம் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பாதான் காரணம் என்று இந்தியா கூறி வந்தது உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும் ஹெட்லி குறித்து கசாப் கூறிய தகவல்கள் உண்மை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அரசுத் தரப்பில் சிலருக்கு இதில் உள்ள தொடர்புகளும் தற்போது உறுதியாகியுள்ளது. ஒட்டு மொத்த சதித் திட்டமும் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டதும் தெளிவாகி விட்டது.
மும்பை குறித்த பல்வேறு தகவல்களை அறிய பல்வேறு குழுக்களை லஷ்கர் இ தொய்பா பயன்படுத்தி வருகிறது. அதில் ஒரு நபர்தான் ஹெட்லி. இதேபோல பாஹிம் அன்சாரி, சபாஹுதீன் அகமது ஆகியோரையும் லஷ்கர் இ தொய்பா பயன்படுத்தி வந்தது
தற்போதாவது இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும், தகவல்களையும் அமெரிக்கா வழங்க வேண்டும். மேலும், ஹெட்லியின் அனைத்துத் தொடர்புகளையும் இந்தியாவுக்கு அது உடனடியாக வழங்கிட வேண்டும். இதன் மூலம் ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்த அனைவரையும் வளைத்துப் பிடிக்க வசதியாக இருக்கும்.
ஹெட்லியின் வாக்குமூலத்தால் இங்கு (மும்பையில்) நடந்து வரும் விசாரணைகளில் பாதிப்பு வராது. அது தொடர்ந்து நடைபெறும் என்றார் நிகாம்.
ஹெட்லியை பாக்.கில் வைத்து விசாரிக்கலாம்:
ஹெட்லியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து மும்பைத் தாக்குதல் வழக்கில் தொடர்புப்படுத்தி விசாரிக்க முடியுமா என்ற கேள்விக்கு நிகாம் பதிலளிக்கையில், அது முடியாத காரியம். காரணம், இந்த வழக்கில் தற்போது ஆதாரத்தைப் பதிவு செய்து முடிந்து விட்டது. வழக்கின் விசாரணையும் கூட முடிந்து விட்டது. எனவே தற்போதைய வழக்கில் ஹெட்லியை சேர்ப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன.
அதேசமயம், தற்போது பாகிஸ்தானில் மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே ஹெட்லியை பாகிஸ்தானில் வைத்து விசாரிக்க முடியும்.
நம்மைப் பொறுத்தவரை, மும்பைத் தாக்குதல் தொடர்பான அனைத்தும் வலுவாக உள்ளன என்றார் நிகாம்.












Click it and Unblock the Notifications