செம்மொழி மாநாடு-கோவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்களும் வரவுள்ளனர்
இதையடுத்து மாநாடு நடைபெறும் நாட்களில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில் வழக்கமாக கோவைக்கு இயக்கப்படும் பிற ரயில்களிலும் இந்த மாநாட்டின்போது 300 படுக்கை வசதிகளை ஒதுக்கித் தருமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வர்த்தகப் பிரிவிடம் தமிழக அதிகாரிகள் கடிதம் தந்துள்ளனர். அதில், ஜூன் 22 முதல் 27ம் தேதி வரை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன், நீலகிரி, கோவை, இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 300 படுக்கை வசதி சீட்டுகளை மாநாட்டில் பங்கேற்போருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே பரிசீலித்து வருகிறது.
மேலும் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மாநாட்டின்போது கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.