அமைச்சரவையில் சிறிய மாற்றம்-துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக இரண்டு துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல கீதா ஜீவன் வசமிருந்த உடல் ஊனமுற்றோர் நலத் துறை 'மாற்றுத் திறனாளிகள் நலத் துறை'யாக மாற்றப்பட்டு இது முதல்வர் கருணாநிதி வசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இருந்தது. அதே போல வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் சிறைத் துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த இரு துறைகளும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் வசம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், அவரிடம் சட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, சிறை ஆகிய மூன்று துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உடல் ஊனமுற்றோர் நலத் துறை:
சமூக நலம் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலத் துறை அமைச்சராக கீதா ஜீவன் செயல்பட்டு வந்தார். அதில், உடல் ஊனமுற்றோர் நலத்துறை என்பது "மாற்றுத் திறனாளி நலத் துறை'யாக மாற்றப்பட்டு முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்காடு வீராசாமியின் உடல் நலக் குறைவால் அவர் வசம் இருந்த பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.