இந்தியாவின் 'காஸ்ட்லி' ரயில் - மமதா தொடங்கி வைத்தார்!
கொல்கத்தா: இந்தியாவின் மிக 'காஸ்ட்லி'யான சொகுசு ரயில் சேவையை கொல்கத்தாவில் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி துவக்கி வைத்தார்.
மஹாராஜா எக்ஸ்பிரஸ் எனப்படும் இந்த சுற்றுலா ரயிலில் பயணம் செய்ய ஓர் இரவுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து கயா, காசி, பாந்தவ்கார்க், கஜூராஹோ, குவாலியர் மற்றும் ஆக்ரா ஆகிய இடங்கள் வழியாக டெல்லி சென்றடையும் இந்த சுற்றுலா ரயிலை நேற்றிரவு 10.10 மணிக்கு கோல்கத்தா ரயில் நிலையத்தில் அமைச்சர் மமதா துவக்கி வைத்தார்.
ஆறு பகல் மற்றும் ஏழு இரவுகள் கொண்ட சுற்றுலா திட்டத்தின் படி, இந்த சொகுசு ரயிலில் பயணம் செய்வது மிகவும் ரம்மியமான அனுபவமாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வசதிகளுடன் 'படு பந்தா'வாக வடிவமைக்கப்பட்ட 23 பெட்டிகளில் மொத்தம் 88 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் கூடுதல் சொகுசு வசதிகள் கொண்ட சிறப்பு 'சூட்' அறைகளும் உள்ளன.
இந்திய ரயில்வே உணவு தயாரிப்பு கழகமும் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சுற்றுலா ரயில் பயண திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications