பென்னாகரம் தேர்தல் விதிமீறல் - நடவடிக்கை எடுக்க நரேஷ்குப்தா உறுதி
தர்மபுரி: தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அமுதா முன்னிலையிலும் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின் நரேஷ்குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சி பிரநிதிகள் முன்வைத்த பிரச்னைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பெரும்பாலான கட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள், கூடுதலான வாகனத்தை பயன்படுத்துவதாகவும், தேர்தல் செலவுகள் அதிகமாக மேற்கொள்வதாகவும், கட்-அவுட், விளம்பரங்கள் அதிக அளவில் வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிக்க சிலர் பணம் கொடுக்க முயல்வதாகவும் கூறினர். இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போன்று வேட்பாளர்களின் செலவுகள் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளும் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர்களால் செலவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது.
இதேபோல், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications