சென்னையில் விரைவில் தண்ணீர் பாக்கெட்களுக்குத் தடை - மேயர் அறிவிப்பு

சென்னை நகரில் தடுக்கி விழுந்தால் தண்ணீர் பாக்கெட் மீதுதான் என்று கூறும் அளவுக்கு அவற்றின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்து விட்டது. இந்த இடம் தான் என்றில்லாமல் எல்லா இடத்திலும் தண்ணீர் பாக்கெட்கள் தடையின்றி கிடைக்கின்றன.
ஆனால் இவற்றில் சுகாதாரம் முறையாக பேணப்படுவதில்லை. குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே இவற்றை தயார் செய்து விற்பதால் அவற்றிற்குத் தர கட்டுப்பாடும் இல்லாமல் போய் விட்டது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெரும்பாலானவர்கள் பாக்கெட்களில் அடைத்துத் தருவதில்லை என்ற புகாரும் உள்ளது. இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இந்த பாக்கெட்களை மக்கள் அப்படியே தரையில் வீசி விட்டுப் போய் விடுவதால் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார். பல பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாக்கெட் தண்ணீர் சுகாதாரமில்லாமல் தயாரிப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 13 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால் அபப்டியும் பலன் ஏதும் ஏற்படவில்லை.
கடந்த 3 மாதங்களில் மட்டும் சுகாதாரமற்ற 1 லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். எனவே குடிநீர் பாக்கெட் விற்பனையை தடை செய்வது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மேயர் மா.சுப்ரமணியம் கூறுகையில்,
தண்ணீர் பாக்கெட்டுகள் சுகாதாரமில்லாமல் விநியோகிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார்.












Click it and Unblock the Notifications