குழம்பு வைக்க ரூ.60 செலவாகுது..பென்னாகரத்தில் விஜயகாந்த்

பென்னாகரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து 2வது நாளாக திறந்த வேனில் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய்காந்த் பேசியதாவது:
இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பணத்தையும், ஒரு கட்சி இனத்தையும் நம்பி போட்டியிடுகிறார்கள். ஆனால் தேமுதிக மட்டும் இந்த தொகுதியில் ஜனத்தை நம்பி போட்டியிடுகிறது.
பெண் சிசு கொல்லப்படுவதை தடுக்க பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை தொடங்கி அந்த குழந்தைகளின் பெயரில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்து, ரூ.50 லட்சம் வரை செலவழித்துள்ளோம்.
இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நான் இருப்பேனோ? இல்லையோ? எனவே குழந்தைகள் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்து இந்த திட்டத்தை நான் செயல்படுத்தவில்லை.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றுவோம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் 6 மாதங்களாக லாரிகள் மூலம் சப்ளை செய்து குடி தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன் அதே போல் இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால் இங்குள்ள குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன்.
ரேசனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறார்கள். ஆனால் குழம்பு வைக்கவேண்டும் என்றால் ரூ.60 வரை செலவு செய்யப்படுகிறது.
இந்த தொகுதியில் உள்ளவர்கள் வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். தேமுதிக வெற்றி பெற்றால் இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கொடுப்பேன்.
எனவே பென்னாகரம் தொகுதியில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார் விஜயகாந்த்.
நேற்று மீன் குழம்பு பேச்சு:
நேற்று அவர் பேசும்போது தமிழ்நாட்டில் நான் அதிகம் சினிமா படப்பிடிப்புக்காக வந்துசென்ற இடங்களில் ஒகேனக்கல்லும் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகள் என் மீது பாசம் வைத்து களியும், மீன்குழம்பும் செய்து கொண்டுவந்து தருவார்கள்.
ஆனால், இப்போது அவர்களிடம் களியும் மீன் குழம்பும் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு விலைவாசி ஏறிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications