8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
கிழக்கு சீனாவில் உள்ள பூஜியான் மாகாணத்தில் உள்ள நான்பிங் சிட்டி தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
காலையில் வகுப்புகளுக்கு மாணவர்கள் வரத் தொடங்கியபோது அந்த ஊழியர் அங்கு வந்தார். மாணவர்களை தடுத்து கையில் இருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களுடன் மறைந்தபடி இவர் வந்துள்ளார். பள்ளிக்கூட கேட்டை தாண்டி உள்ளே நுழைந்ததும், கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தத் தொடங்கினார்.
இதில் பல குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. அந்தப் பகுதியே பெரும் பரபரப்பில் மூழ்கியது. இந்த வெறிச் செயலில் எட்டு குழந்தைகள் உயிரிழந்தனர். டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்தன.
குழந்தைகளை வெறித்தனமாக தாக்கிய நபர் பெயர் ஜெங் மின்ஷெங். 41 வயதாகும் இவர் மன நலம் பாதித்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஷெங், ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவர். கடந்த ஜூன் மாதம் பணியிலிருந்து விலகினார். அதன் பின்னர் வேலையில்லாமல் சுற்றி வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.