பனிமூட்டம்- சென்னையில் இறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி விடப்பட்ட விமானம்
அபுதாபியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு எடிஹாட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் இருந்தனர்.
விமானம் சென்னை வந்தபோது கடும் பனிமூட்டம் காரணமாக ரன்வே தெரியாமல் தடுமாறினார் விமானி.
இதையடுத்து விமானத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பெங்களூருக்கு திருப்பிவிட்டனர். பெங்களூரில் அந்த விமானம் தரை இறங்கியதும் விமான கேப்டன்கள், பணிப்பெண்கள் ஓய்வு எடுக்க சென்றுவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் பனி மூட்டம் விலகிவிட்ட பிறகும் அந்த விமானம் பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டு வரவில்லை. சென்னை வரவேண்டிய 147 பயணிகளும் சிறிது நேரம் பெங்களூரில் தவித்தனர். பிறகு அவர்கள் அனைவரும் தனி விமானம் ஒன்றில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே அபுதாபி செல்ல சென்னை விமான நிலையத்தில் 62 பயணிகள் காத்திருந்தனர். அந்த விமானம் பெங்களூர் சென்று விட்ட காரணத்தால் 62 பயணிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.