ரேசன் அரிசி கடத்திய மூவருக்கு 7 ஆண்டு சிறை
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ரேசன் அரிசி கடத்திய வழக்கில் மதுரையை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி கோவில்பட்டியை அடுத்துள்ள தோணுகால் விலக்கு மெயின்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ஒரு லாரியில் 240 மூட்டை ரேசன் அரிசி கடத்தப்பட்டதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை பாண்டி நகரை சேர்ந்த லாரி டிரைவர் சாதிக் அலி, மதுரை கேபுதூரை சேர்ந்த கிளினர் கருப்பசாமி, மதுரை பெருங்குடியை சேர்ந்த ஏஜெண்ட் ராஜா, மற்றும் லாரியில் இருந்த மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அண்ணாத்துரை, மணிமாறன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு லாரி டிரைவர் சாதிக் அலி, கிளினர் கருப்பசாமி, ஏஜெண்ட் ராஜா ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அண்ணாத்துரை, மணிமாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications