பாலியல் புகார்கள்... மன்னிப்பு கேட்ட போப்!
சில நாட்டு பாதிரியார்கள் மீது கடந்த பல ஆண்டு காலமாக இந்த சிறுவர் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வந்தாலும், அதுகுறித்து யாரும் விரிவாகப் பேசியதில்லை. குறிப்பாக போப் ஆண்டவர்கள் யாரும் இதுகுறித்து பேசியதில்லை.
முதல் முறையாக இந்த குற்றச்சாட்டை வாடிகன் ஒப்புக் கொண்டுள்ளது.
தனது கட்டுப்பாட்டிலுள்ள சில நாடுகளின் தேவாலயங்களில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது உண்மைதான் என்பதை போப் 16வது பெனடிக்ட் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சிறுவர்கள் அந்தந்த தேவாலய தலைமைப் பீடத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பவர்கள் மற்றும் தேவாலய விடுதிகளிலேயே தங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் புகார்கள் ஜெர்மனியிலிருந்து மட்டுமே வந்துள்ளன. அயர்லாந்து நாட்டில் ஏராளமான சிறுவர்களை இம்மாதிரி பாலியல் தொந்தரவுக்கு பாதிரியார்கள் உள்ளாக்கி வந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பாதிரியார் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இன்னும் ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளது இப்போது சமூகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
போப் பெனடிக்ட், ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் வேறு சில பாதிரியார்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
எனவே, "போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனடிக்ட்டை சந்தித்து கோரினார்.
நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
"பாதிக்கப்பட்ட உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆனால் தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கும் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்து நாட்டில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை, பாதிரியார்கள் சீரழித்துள்ளதாக வந்த புகார்களில் உண்மையிருப்பதாக போப் ஆண்டவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
'இந்த செக்ஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக, ஒளிவு மறைவின்றி விவாதித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்; தேவாலயங்கள் என்பவை ஆண்டவரும் உண்மையும் மட்டுமே குடிகொண்டுள்ள இடங்கள் என்பதை மக்கள் நம்பும்படி செய்ய வேண்டும்' என பல நாடுகளின் பிஷப்கள் குரல் உயர்த்தியுள்ளனர்.