தஞ்சை அருகே தியாகிகள் சின்னம் தகர்ப்பு - சிபிஎம் கடும் கண்டனம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரது சினைவு சின்னங்களை இடித்த பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் நீலமேகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுபற்றி கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலும், நிலக்குவியலுக்கு எதிராக, ஜமீன்தார், பண்ணையார்கள் ஆதிக்கத்திற்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் ஒன்று திரண்டு போராடி வந்தனர்.
இந்த நியாயமான போராட்டத்தை அடக்கி, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. தலைவர்களின் தலைகளுக்கு விலை வைத்து வேட்டையாடியது.
தஞ்சை மாவட்டத்தில் வலுவாக நடைபெற்ற அந்த போராட்டத்தில் தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய மூவரையும் காங்கிரஸ் அரசு 1950ம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையை வைத்து சுட்டுக் கொன்றது.
இறந்தவர்களின் சடலங்களை அரசே பட்டுக்கோட்டையில் பிரேதப் பரிசோதனை செய்து யாரிடமும் சொல்லாமல் அடக்கமும் செய்தது.
அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் நினைவுச் சின்னம் எழுப்பி, ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றது.
ஆனால், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அந்த மகத்தான தியாகிகளின் நினைவுச் சின்னத்தை இடித்து தரை மட்டமாக்கியுள்ளது.
இந்த அநாகரிகமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை மீண்டும் கட்டித் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications