பெண் ஊழியரை நிர்வாண ஸ்கேன் எடுத்த லண்டன் விமான நிலைய அதிகாரி
லண்டன்: ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க வைக்கப்பட்டுள்ள, பயணிகளை நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே பகுதிக்குள் நுழைந்த பெண் ஊழியர் ஒருவரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அதிகாரி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை நிர்வாணமாகக் காட்டி பரிசோதிக்க உதவும் எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
தீவிரவாதிகள் தங்களது உடைகளுக்குள் எதையாவது ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இந்த எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டது.
ஆனால் இதை அங்குள்ள ஊழியர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சக பெண் ஊழியரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார்.
அந்த அதிகாரியின் பெயர் ஜான் லேக்கர். ஜோ மார்கெட்சன் என்ற பெண் ஊழியர் அந்த எக்ஸ்ரே இயந்திரப் பகுதிக்குள் தற்செயலாக சென்று விட்டார். சற்று குண்டான உடல்வாகு கொண்டவர் அவர்.
அவரது உடல் நிர்வாணமாக எக்ஸ்ரே இயந்திரத்தில் தெரிந்தது. இதைப் பார்த்த லேக்கர், அவரது உடல் பாகம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது நிர்வாண கோலத்தையும் புகைப்படமாக எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பாதுகாப்பு அதிகாரி குறித்து ஜோ மேலிடத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து லேக்கரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
லேக்கர் குறித்து விமான நிலைய போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம் ஜோ.
இதுகுறித்து ஜோ கூறுகையில், நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். என்னால் மீண்டும் வேலைக்குப் போகும் மன நிலைக்கே வர முடியவில்லை என்றார் ஜோ.












Click it and Unblock the Notifications