கல்கி ஆசிரமத்தில் என்ன நடக்கிறது?-அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சர்ச்சைக்குரிய கல்கி ஆசிரமத்தில் நடைபெறும் செயல்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான வீடியோ காட்சிகளை டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பக் கூடாது. செய்திகளை மட்டும் வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே கல்கி ஆசிரமம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இருப்பினும் சமீபத்தில் அங்கு பெரும் பிரச்சினை உருவானது. பெண் பக்தர்களுக்கு போதைப் பொருட்களைக் கொடுத்து அவர்களை அடிமைகளைப் போல வைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமத்தில் ஆண், பெண் பக்தர்கள் நிலை குறித்து தெலுங்கு மற்றும் தமிழில் சில தொலைக்காட்சிகள் பரபரப்பு காட்சிகளை ஒளிபரப்பின.
அதில் பெண்களும், ஆண்களும் போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்ட நிலையில், வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற காட்சிகள் இருந்தன.
இதற்குத் தடை விதிக்கக் கோரி கல்கி பகவான் என்ற விஜயகுமாரின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில்,
என்னைப் பற்றி இந்த டி.வி. சேனல்களில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்த செய்திகளை ஒளிபரப்புவதற்கு முன்பு அதுபற்றிய விவரங்களை என்னிடமோ, எனது குடும்ப உறுப்பினர்களிடமோ, அவர்கள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ கேட்கவில்லை.
இந்த செய்தியில் என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. கல்கி பகவான் நடத்தும் அறக்கட்டளை சேகரித்துள்ள பணம் அனைத்தையும் நான் பயன்படுத்துவதாகவும், பொதுமக்கள் கொடுக்கும் அந்த பணத்தை நான் கையாடல் செய்வதாகவும் செய்திகளில் கூறப்படுகிறது.
இதனால் நானும், எனது குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த வேதனையையும், மனவலியையும் அடைந்தோம். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை.
கல்கி பகவானின் மகனாக இருந்தாலும் எனக்கும், கல்கி அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் 23 நிமிட நிகழ்ச்சியில் என்னைப்பற்றி தவறாக திரித்து கூறுகின்றனர். இது வேண்டுமென்றே எனது, தந்தை, மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.
எனது தந்தையின் வழியில் நான் நடக்கவில்லை. எனது நோக்கமே தொழில்கள்தான். நான் ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு அம்சங்கள், விவசாயம், கட்டுமானம் ஆகிய தொழில்களை நடத்தி வருகிறேன். அமெரிக்காவிலும் சில திரைப்படங்களை நான் வெளியிட்டு இருக்கிறேன். ஆனால், எனது தொழிலும், எனக்கு கிடைக்கும் நிதியும் வேறுவிதமாக வந்ததுபோல செய்திகளில் கூறுகின்றனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்யவேண்டும் என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
கல்கி பகவானின் பக்தர்களை அவரிடமிருந்து பிரிக்கும் நோக்கத்தில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. எனவே, இந்த செய்திகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபோல் மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த 30 டி.வி. சேனல்கள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜசூரியா,
டி.வி. சேனல்களில் ஆசிரமத்தில் உள்ள சிலரது முகங்கள், அவர்களை அடையாளம் காட்டும் வண்ணம் ஒளிபரப்பப்படுவதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் அந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்புவதற்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.
இந்த விஷயத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. எனவே, வருகிற 31-ந் தேதி வரைக்கும் கல்கி ஆசிரம வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் சில கட்டுப்பாடுகளை கோர்ட் விதிக்கிறது. ஆசிரமம் தொடர்பாக டி.வி.யில் காட்டப்பட்டுள்ள காட்சிகளுக்கு மனுதாரரும், அந்த ஆசிரமத்தின் அதிகாரியும் தகுந்த விரிவான விளக்கங்களை அளித்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு சார்பில் வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரலும் வருகிற 31-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு நடக்க இருக்கும் இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்.
ஆசிரமத்தின் செய்திகளை வெளியிடக்கூடாதா என்று சில டி.வி.சேனல்கள் கேள்வி எழுப்பியுள்ளன. நான் இடைக்கால தடை விதித்திருப்பது வீடியோ காட்சிகளுக்கு மட்டும்தான். செய்திகளுக்கு அல்ல. அந்த ஆசிரமம் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு டி.வி.சேனல்களுக்கு முழு உரிமை உண்டு. அது அவதூறாகாது என்றார்.












Click it and Unblock the Notifications