நித்யானந்தா வழக்கு - கர்நாடக போலீசார் சேலத்தில் தீவிர விசாரணை
ஆத்தூர்: நித்யானந்தாவின் விவகாரமான வீடியோக்களை போலீசிடம் ஒப்படைந்த சாமியாரின் முன்னாள் சிஷ்யர் லெனின் என்கிற தர்மானந்தாவின் வீட்டில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் அருகே பிடுதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் சல்லாபிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பிறகு தலைமறைவான நித்யானந்தா பல்வேறு வீடியோக்களில் தோன்றி தனது விளக்கங்களை அளித்து வருகிறார்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பணியாற்றிய தர்மானந்தா என்கிற லெனின் அளித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா மீது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
ஆனால், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நித்யானந்தாவின் ஆசிரமம் பெங்களூர் அருகில் உள்ள பிடுதியில் இருப்பதால், தமிழக போலீசார் வழக்கை கர்நாடக காவல்துறையிம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழில் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கன்னட மொழிக்கு மாற்றப்பட்டு வழக்கை நடத்துவதற்கு கர்நாடக போலீசார் இரு தினங்களுக்கு முன்பே தயாரானார்கள்.
இதற்கிடையே தனக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இம்மனுவை நிராகரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நித்யானந்தா மீதான வழக்கை போலீசார் தொய்வின்றி தொடர்நது நடத்தவேண்டும் எனக் கூறி,
வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 26ம் தேதிக்குள் (நாளை) போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருக்கும் நித்யானந்தா ஆசிரமத்தில் பெங்களூர் சிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வீடியோவை வெளியிட்ட நித்யானந்தரின் தலைமை சீடராக இருந்த லெனின் தர்மானந்தாவின் வீட்டில் கர்நாடகா சிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்தவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
கர்நாடகா உளவுப் பிரிவு டிஜிபி தலைமையில் சிஐடி பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications