திருவள்ளூர் அருகே மின்சார வயர் அறுந்ததால் ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து!

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் -செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார லைனில் கோளாறு ஏற்பட்டது. அதனை ஊழியர்கள் சரி செய்தபோது, திடீரென மின் கம்பத்திலிருந்த பீங்கான் குப்பி உடைந்தது.
இதனால் மின்சார வயர் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை புறப்பட்ட ஷாலிமர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சென்னை சென்று கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பத்தூரில் நிறுத்தப்பட்டது. அதேபோல் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட திருத்தணி அரக்கோணம் மின்சார ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. திருத்தணி அரக்கோணத்திலிருந்து காலையில் புறப்பட்ட மின்சார ரயில்களும் பாதிவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால் வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.
அதன்பிறகு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் புறப்பட்டு சென்றன.
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே அறுந்த மின் வயரை சரி செய்யும் போது ரயில்வே ஊழியர் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். அவர் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications