தமிழகத்தில் வாட்டி எடுக்கும் வெயில்-2 பேர் பலி

தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கி கொளுத்த தொடங்கியுள்ளது. கத்திரி வெயிலைப் போல மிக்க் கடுமையாக இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் குறைந்தபட்ச வெயிலே 100 டிகிரிதான்.
வேலூர், சேலம் போன்ற நகரங்களில் 102 டிகிரி வரை சராசரியாக வெயில் அடிக்கிறது. குளிர்ச்சியான பகுதிகளான கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட வெயில் வெளுத்துக் கட்டுகிறது.
இந்த நிலையில் கடும் வெயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அறந்தாங்கி அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கந்தசாமி என்பவர், மளிகைப் பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்பியபோது பஸ் நிலையத்தில் களைப்படைந்து மயங்கி விழுந்து இறந்தார்.
அதேபோல அறந்தாங்கியைச் சேர்ந்த நகராட்சி துப்புறவுத் தொழிலாளியான சாலமன் என்பவரும் வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வெயில் மேலும் அதிகரிக்கும்...
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ராஜ் கூறுகையில்,
கிழக்கு காற்று, மேற்கு காற்று என இரண்டு விதமான காற்றுகள் வீசுவதால் வெப்பநிலை அளவு மாறுபடும். வங்கக்கடல் பகுதியில் இருந்து வீசும் கிழக்கு காற்றினால் வெப்பநிலை குறையும். அதேநேரத்தில், அரபிக் கடல் பகுதியில் இருந்து வீசும் மேற்கு காற்றினால் வெப்பநிலை உயரும் தற்போது கிழக்கு காற்று அதிகமாக வீசுவதால் வெப்பநிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், சென்னையில் கடல் காற்று வீசுவதால் வெப்பம் குறைவாக உள்ளது.
எனவே, சென்னை, வேலூர், மதுரை, சேலம் போன்ற இடங்களில் வெப்பநிலை ஒரே அளவில் அதிகமாக இருந்தால்கூட சென்னையில் கடல்காற்று காரணமாக வெப்பம் குறைந்துவிடும். பொதுவாக கடல்காற்றின் தாக்கம் சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும். இந்த ஆண்டு டெல்லி, நாக்பூர் போன்ற இடங்களில் சராசரி அளவை விட தற்போது அதிக வெப்பநிலை காணப்படுகிறது.
அந்த வகையில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் 3-வது வாரத்தில் அதிகரிக்க தொடங்கும். இந்த வெப்பம் ஜுன் மாதம் வரை நீடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications