சென்னையில் தேசிய கடலோர மேலாண்மை மையம் - ரூ. 166 கோடியில் அமைகிறது
டெல்லி: சென்னையில் ரூ. 166 கோடியில் தேசிய கடலோர மேலாண்மை மையத்தை மத்திய அரசு அமைக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில்,
நாடு முழுவதும் உள்ள 7,500 கிலோ மீட்டர் தூர கடலோர பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பு, கடல் சீற்றம் மற்றும் கடல் அலை தாக்குதல் ஆகியவற்றால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தகுந்த வாழ்வியல் சூழலை உருவாக்கித் தருவது, கடலோர பகுதியில் உள்ள ஈரப்பத நிலங்களை பாதுகாப்பது, கடல் நீர் மாசுபடுவதை தடுப்பது போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கடலோர பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் பேர் நேரடியாகவும், 6 கோடி பேர் மறைமுகமாகவும் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ், மாங்குரோவ் காடுகளின் எல்லை பகுதியை நிர்ணயம் செய்வது, பவளப் பாறைகளை பாதுகாப்பது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஆயிரத்து 156 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை திட்டத்திற்கு 897 கோடி ரூபாயை உலக வங்கி கடனாக வழங்கும். மீதித் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
தமிழ்நாட்டில் பிச்சாவரம் மற்றும் மன்னார் வளைகுடா, மேற்கு வங்காளத்தில் சுந்தர்பன், கேரளாவின் வேம்பநாடு உள்ளிட்ட 7,500 கி.மீ. தூர கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தும்.
ஒருங்கிணைந்த தேசிய கடலோர மேலாண்மை மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக 166 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications