கோவையில் வேலை நிறைய இருக்கு... செய்யத்தான் ஆளில்லை!
கோவை: தொழிற்சாலையைத் திறந்துவிட்டோம், ஆர்டர் வரவில்லையே என்று கோவை சிறுதொழில் முதலீட்டாளர்கள் ஏங்கிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
இப்போது, ஆர்டர் குவிந்து கிடக்கிறது... ஆனால் செய்வதற்கு ஆட்கள் இல்லையே என்று தவிக்கும் நிலை அவர்களுக்கு.
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் 25 ஆயிரம் தொழிற்கூடங்களுக்கு இப்போது நேரடியாக வெளிநாட்டு ஆர்டர்கள் வந்து குவிகின்றனவாம். ஆனால் இந்த ஆர்டர்களை குறித்த காலத்துக்குள் முடித்துத் தர திறமையான தொழிலாளர்கள் கிடைக்காததால் முடங்கியுள்ளனவாம் பல தொழிற்கூடங்கள்.
டர்னர், பிட்டர், மில்லர், மெஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐடிஐ மையங்களில் இன்றைக்கு பெரும்பாலான மாணவர்கள் சேராமல், பாலிடெக்னிக், எஞ்ஜினீயரிங் படிப்புகளை நாடுவதாலும் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் இந்த சிறுதொழிலதிபர்கள்.
உள்நாட்டு ஆர்டர்களுக்கு கிடைக்கும் கட்டணத்தை விட வெளிநாட்டு ஆர்டர்களுக்கு இரட்டிப்பு கட்டணம் கிடைக்கும் என்பகதால், கிடைத்த ஆர்டர்களை விடவும் முடியாமல் செய்யவும் முடியாமல் தவிக்கிறார்களாம் சிறுமுதலீட்டாளர்கள்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநில அரசு சிறுதொழில் பயிற்சி மையங்களை அதிகம் ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனை அதிகம் வழங்குதல், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் சிறு, குறு தொழிலகங்களில் ஓராண்டு பயிற்சி பெறுவதை கட்டாயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கலாம் என்கிறார்கள் சிறுமுதலீட்டாளர்கள்.












Click it and Unblock the Notifications