விமானத்தில் வெடிப்பொருள்-கேரளாவைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை
திருவனந்தபுரம்: விமானத்தில் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டது தொடர்பாக பெங்களூர் விமான நிலையத்தில் மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த கிங்ஃபிஷர் தனியார் விமானத்தில் வெடிப்பொருட்கள் இருந்தது கடந்த ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆபத்தான வெடிப்பொருட்கள் விமானத்தில் காணப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கியது.
இந்த வெடிப்பொருட்களை யார் வைத்தது என்பது குறித்து பெங்களூர் விமான நிலையத்திலும், திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர்.
விமானத்தில் பயணித்தவர்களின் விவரம், விமான நிலைய ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் தீவிரமாக சோதித்து பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பெங்களூர் விமான நிலையத்தில் மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் துபாய்க்கு புறப்பட திட்டமிட்டிருந்தவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் தகவல்கள் தந்த அவர்கள், விமானத்தில் வெடிப்பொருள் வைத்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரள போலீசார் மூன்று பேரையும் விசாரணைக்காக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications